எழுத்தாளர் பூமணிக்கு அரசு மரியாதை... ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் விஜய் சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளரும், தமிழ் இலக்கிய உலகின் முக்கிய படைப்பாளருமான பூமணி மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கரிசல் நில மக்களின் வாழ்க்கை, சமூக யதார்த்தம் மற்றும் வரலாற்று உண்மைகளை தனது படைப்புகள் மூலம் அழுத்தமாக பதிவு செய்து, தமிழ் இலக்கியத்திற்கு பூமணி அளித்த பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், 'அஞ்ஞாடி' நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றது அவரது இலக்கியச் சாதனைகளுக்கு கிடைத்த உயரிய அங்கீகாரம் என்றும், அவரது 'வெக்கை' நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவான 'அசுரன்' திரைப்படம் அவரது படைப்புகளை உலகளவில் அறிமுகப்படுத்தியதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். பூமணியின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்றும், அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தமிழ் இலக்கிய உலகைச் சேர்ந்த அனைவருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார். மேலும், பூமணியின் இலக்கியப் பங்களிப்பை போற்றும் வகையில், அவரது இறுதிச்சடங்கிற்கு தமிழ்நாடு அரசு மரியாதை வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.