பெரம்பூரில் எம்.எல்.ஏ. அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்.. இ-சேவை மையத்தையும் தொடங்கி வைத்தார்! தமிழ்நாடு முதலமைச்சரும், பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினருமான விஜய், தனது சொந்த தொகுதியான பெரம்பூரில் புதிய எம்.எல்.ஏ. அலுவலகத்தை இன்று திறந்து வைத்தார். முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, பெரம்பூரில் நடைபெற்ற அவரது முதல் அதிகாரப்பூர்வ தொகுதி நிகழ்வாக இது அமைந்தது. புதிய அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இ-சேவை மையத்தையும் முதலமைச்சர் விஜய் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்த மையத்தின் மூலம் அரசின் பல்வேறு சேவைகளை பொதுமக்கள் ஒரே இடத்தில் எளிதாக பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அலுவலகத்தை திறந்து வைத்த பின்னர், அங்கு நிறுவப்பட்டிருந்த கொள்கைத் தலைவர்களின் உருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய முதலமைச்சர் விஜய், தொடர்ந்து அலுவலகத்தின் பல்வேறு வசதிகளை பார்வையிட்டார். பின்னர், தனது எம்.எல்.ஏ. அலுவலகத்தில் ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்து, அலுவலகத்தின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன், முதலமைச்சர் விஜய்க்கு மலர்கொத்து வழங்கி வரவேற்றார். அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் ஏராளமான பொதுமக்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பெரம்பூர் மக்களுக்கு தேவையான அரசு சேவைகள் விரைவாகவும், எளிமையாகவும் கிடைக்க இந்த புதிய அலுவலகமும் இ-சேவை மையமும் முக்கிய பங்காற்றும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.