தவெக ஆட்சிக் கவிழ்ப்பு சதி வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடமும் அவரது சகோதரர் அசோக்குமாரிடமும் திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் இருவரும் சுமார் ஒரு மாத காலம் தலைமறைவாக இருந்தனர். பிணை உத்தரவாதம் செலுத்தி, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் காலை, மாலை ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கப்பட்டதை அடுத்து இன்று இருவரும் ஆஜராகி கையெழுத்திட்டனர். இதையடுத்து திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் ஜெயச்சந்திரன் தலைமையில் இருவரிடமும் தனித்தனியே விசாரணை நடத்தப்பட்டது. இரண்டரை மணிநேர விசாரணைக்குப்பின் வெளியே வந்த செந்தில் பாலாஜியிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில், இப்போது வேண்டாம் பிறகு சந்திக்கிறேன் எனக் கூறிவிட்டு புறப்பட்டார்.