தமிழகத்தில் சுத்திகரிக்கப்படாத சாயப்பட்டறை கழிவுகளால் நீர் நிலைகளும், நிலத்தடி நீரும் சுற்று சூழலும் கெடுவதோடு மனிதர்களுக்கு கேன்சர் போன்ற கொடிய நோய்களும் ஏற்படக்கூடிய ஆபத்து உண்டாவதால் சட்ட விரோத சாயப்பட்டறைகளை அரசு முழு வீச்சில் அகற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. திருப்பூர், ஈரோடு, சேலம் பகுதிகளை தொடர்ந்து தென்காசி மாவட்டத்தின் சங்கரன் கோவிலில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த சாய ஆலைகளில் அமைச்சர் ராஜீவ் ஆய்வு நடத்தினார். அவரது உத்தரவின் பேரில் அதிகாரிகள் 20க்கும் மேற்பட்ட சட்ட விரோத சாயப்படறைகளுக்கு சீல் வைத்தனர். சீல் வைக்கும் நடவடிக்கையின் போது ஆலை பக்கம் வராத சாய ஆலை உரிமையாளர்கள் பலர் , இந்த தொழிலை நம்பி உள்ள நெசவாளர்களை தூண்டி குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட வைத்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். இரவு நடந்த போராட்டத்தின் போது நெசவாளர் வீட்டு குழந்தைகளை அழைத்து அவர்களிடம் மைக்கை கொடுத்து உங்களை தவெகவுக்கு ஓட்டுபோட சொன்ன, விஜய் மாமாவுக்கு கோரிக்கை வையுங்கள், சீல் வைக்கப்பட்ட ஆலைகளை திறக்க சொல்லுங்கள் என்று சிலர் தூண்ட, அதனை கிளிப்பிள்ளைகள் போல அந்த சிறுவர் சிறுமிகளும் சொல்லிச்சென்றனர். சாயப்பட்டரைகளை மூடிவிட்டதால், ஆடி தபசு விழாவில் , மண்டகபடியை எப்படி செய்வது? என்பது போலவும் சிலர் கேள்வி எழுப்பினர். காலையில் மீண்டும் கருப்பு கொடியுடன் போராட்டத்தை முன்னெடுத்த சாய ஆலை உரிமையாளர்கள், கஞ்சி தொட்டி திறக்க போவதாக கூறி ஊர்வலமாக சென்றனர். நவீன சுத்திகரிப்பு ஆலையை அரசே அமைத்து தரவேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் முன்வைத்தனர். அவர்களை கைது செய்து போலீசார் வாகனத்தில் ஏற்றி சென்றனர். சட்ட விரோத சாய அலைகள் மண்ணுக்கும் மக்களுக்கும் கேடு என்ற நிலையில் நெசவாளர்களை கேடயமாக வைத்து போராட்டத்தை முன்னெடுத்து வரும் சட்ட விரோத சாய ஆலை உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சூழலில் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முன்னதாக அனைத்து சாயப்பட்டறை உரிமையாளர்களையும் அழைத்து பேசிய மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு நவீன சுத்திகரிப்பு கூடம் அமைப்பதற்கு 20 நாட்கள் கால அவகாசம் அளித்ததாகவும், அதில் சிலரை தவிர்த்து பலரும் தங்கள் மீது அப்படி என்ன நடவடிக்கை எடுத்துவிடபோகிறார்கள் என்று மெத்தனமாக இருந்த நிலையில் சாய ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.