முதலமைச்சரான பின் முதன் முறையாக தனது சொந்த தொகுதியான பெரம்பூர் சென்ற முதலமைச்சர் விஜய், தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து பேசின் பிரிட்ஜ், வியாசர்பாடி வழியே சென்ற முதலமைச்சருக்கு வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சாலையின் இரு மருங்கிலும் திரண்ட மக்கள் மலர்கள் தூவி ஆரவாரம் எழுப்பியவாறு வரவேற்பு அளித்தனர். தன்னை வரவேற்க கூடி நின்றவர்களை நோக்கி முதலமைச்சர் விஜய் கையசைத்தபடியே சென்றார். தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த முதலமைச்சர், அதனை பார்வையிட்டார். பின்னர் தனது இருக்கையில் அமர்ந்து பணிகளை கவனித்தார். பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இ-சேவை மையத்தையும் திறந்து வைத்து அதன் செயல்பாடுகளை ஆய்வு செய்தார். அதேபோல், பெரம்பூர் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட விஜய் தொகுதியில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அலுவலகம் வெளியே நின்ற பெரம்பூர் தவெக நிர்வாகிகளுடன் இணைந்து விஜய் குழுப்புகைப்படம் எடுத்தார். இதையடுத்து பெரம்பூர் தொகுதியில் வீதி வீதியாக நடந்து சென்றபடி தொகுதி மக்களுக்கு முதலமைச்சர் விஜய் நன்றி தெரிவித்தார். பின்னர், தமிழ்நாடு முழுவதும் விண்ணப்பித்து காத்திருந்த 73,000 பேருக்கு பெரம்பூரில் உள்ள ரேசன் கடையில் வைத்து, ஸ்மார்ட் ரேசன் அட்டைகளின் விநியோகத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து அந்த ரேசன் கடையில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர், அரிசி, சர்க்கரை, பருப்பு போன்றவற்றை பயனாளர்களுக்கு வழங்கினார். வியாசர்பாடி மின்சார பேருந்து பணிமனைக்கு சென்ற முதலமைச்சர் விஜய், பேருந்து சார்ஜிங் நிலையத்தை ஆய்வு செய்தார். 32 சார்ஜிங் பாயிண்டுகள் உள்ள பேருந்து பணிமனையை பார்வையிட்ட அவர், அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். இங்கு இரண்டு மணி நேரத்தில் ஒரு பேருந்துக்கு முழுமையாக சார்ஜிங் செய்ய முடியும். மேலும் இந்த பணிமனையில் சுமார் 140 மின்சார பேருந்துகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மின்சார பேருந்தில் ஏறி ஆய்வு செய்த முதலமைச்சர், பெண் ஓட்டுநர், நடத்துநர்கள் மற்ரும் சார்ஜிங் நிலைய பணியாளர்களுடன் கலந்துரையாடி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.