சென்னை: வார இறுதி நாட்களுடன் விநாயகர் சதுர்த்தி விடுமுறையும் இணைந்துள்ளதால், சென்னையில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குப் படையெடுத்து வருகின்றனர். இதனால் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் வழக்கத்தை விட அதிகளவில் கூட்டமும், சாலையில் வாகன நெரிசலும் காணப்படுகிறது. கிளாம்பாக்கத்தில் அலைமோதிய கூட்டம் சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் மற்றும் பிற வெளியூர்களுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. சொந்த ஊர்களுக்குச் செல்ல மக்கள் ஒரே நேரத்தில் திரண்டதால், பேருந்து நிலைய வளாகத்தில் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்கும் நிலை ஏற்பட்டது. ஆம்னி பேருந்துகளில் கட்டணக் கொள்ளை புகார் விடுமுறையை பயன்படுத்தி சென்னையில் இருந்து வெளியூர்களுக்குச் செல்லும் பயணிகளிடம் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் விடுமுறை காலங்களில் ஆம்னி பேருந்து கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் நெரிசல் தொடர் விடுமுறையையொட்டி ஏராளமான மக்கள் கார்கள் மற்றும் பிற வாகனங்களில் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றதால், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. சாலையில் வாகனங்கள் சாரை சாரையாக அணிவகுத்துச் சென்றதால், பல இடங்களில் போக்குவரத்து மெதுவாக நகர்ந்தது. ரயில் நிலையங்களிலும் கூட்டம் பேருந்து நிலையங்கள் மட்டுமின்றி, சென்னையின் முக்கிய ரயில் நிலையங்களான சென்னை சென்ட்ரல், எழும்பூர் மற்றும் தாம்பரம் ஆகிய இடங்களிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ரயில்களில் போதிய இடம் கிடைக்காததால், பயணிகள் முண்டியடித்துக் கொண்டு பயணம் செய்யும் நிலையும் ஏற்பட்டது. முன்பதிவு செய்யாத பயணிகள் பொதுப்பெட்டிகளில் அதிக கூட்டத்துடன் பயணம் மேற்கொண்டனர். விமானக் கட்டணமும் இருமடங்குக்கு மேல் உயர்வு விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு விமானப் பயணத்திற்கான கட்டணமும் கணிசமாக உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லும் விமான டிக்கெட் ரூ.12 ஆயிரம் வரையிலும், தூத்துக்குடிக்கு செல்லும் விமான டிக்கெட் ரூ.17 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்பட்டதாக பயணிகள் தெரிவிக்கின்றனர். தொடர் விடுமுறை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து சொந்த ஊர்களுக்குப் புறப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் கூட்ட நெரிசல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.