திருப்பூரில், தாராபுரம் சாலை செட்டிபாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற கல்வி வளர்ச்சி நாள் விழாவில் பங்கேற்ற வீ தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை, படிப்பு மற்றும் விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகளுக்கு பரிசளித்து பாராட்டினார். விழாவில் உரையாற்றிய அண்ணாமலை, ஒருவரை குடிக்க வைத்து அந்த பணத்தில் பட்ஜெட் போடக்கூடாது என சுத்தமான பட்ஜெட் கொடுத்தவர் காமராஜர் என்று தெரிவித்தார். ஆனால் இன்று 18 சதவீதம் பேர் குடிக்கு அடிமையாகி உள்ளதாகவும், 18ல் இருந்து 21 வயதுக்குள் நான்கில் ஒருவர் மது அருந்துவதாகவும், அண்ணாமலை தெரிவித்தார். எனவே, மதுப்பழக்கம் தீங்கானது, அதை கைவிடுமாறு குழந்தைகளாகிய நீங்கள் சொன்னால் பெரியவர்கள் கேட்பார்கள் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டார். தொடர்ந்து மாணவர்களுடன் போதை இல்லா தமிழகம் என்ற உறுதிமொழியை, மாணவ, மாணவிகளுடன் சேர்ந்து அண்ணாமலை ஏற்றார்.