தமிழகத்தில் அரை நூற்றாண்டு கால திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை முறியடித்து ஆட்சி அமைத்த த.வெ.க. அரசு தனது 100 நாட்களை நிறைவு செய்துள்ளது. ஆட்சி அமைத்ததும் வேறு எந்த முதலமைச்சரும் செய்யாத செயலாக பதவியேற்ற அரங்கிலேயே வைத்து 200 யூனிட் இலவச மின்சாரம், சிங்கப்பெண் சிறப்புப் படை மற்றும் 65 போதைப்பொருள் தடுப்புப் படைகளுக்கான உத்தரவில் முதன்முதலில் கையெழுத்திட்டார் முதலமைச்சர் ஜோசப் விஜய். பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் நலன் கருதி கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அருகே இருந்த 717 டாஸ்மாக் கடைகள் உடனடியாக மூடப்பட்டன. 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், விவசாயிகளின் பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதோடு, அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 60 சதவீதமாக உயர்த்தப்பட்டது. 'அண்ணனின் சீர்' திட்டத்தின் கீழ் ஏழைப் பெண்களுக்குத் திருமண நிதி உதவியாக 8 கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை வழங்கும் புதிய திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்குத் 'தாய்மாமன் தங்க மோதிரம்', மாணவர்களுக்கு இலவச லேப்டாப் மற்றும் ஹெல்மெட்டுடன் கூடிய சைக்கிள் வழங்கும் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. தொழில் துறையில் 100 நாட்களில் 104 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 1 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 1 லட்சத்து 21 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. தொழில் முதலீடுகளை ஒரே இடத்தில் குவிக்காமல் ராமநாதபுரம் உட்பட 23 மாவட்டங்களுக்குப் பரவலாக்கி சாதனை படைக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், மாநிலத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள், பாலியல் குற்றங்கள் மற்றும் மின்தடை போன்ற புகார்கள் அரசுக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன. அனுபவம் வாய்ந்த திமுக, அதிமுக ஆகிய இரு வலுவான எதிர்க்கட்சிகளின் கேள்விக் கணைகளைச் சமாளித்து, ஊழலற்ற நிர்வாகத்தை நோக்கிய தனது பயணத்தைத் த.வெ.க. அரசு தொடர்கிறது.
Back to Top News
Top
August 17, 2026 at 5:11 AM
த.வெ.க. அரசின் 'வெற்றி' நடைபோடும் 100-வது நாள் இன்று!
Polimer News