மதுரையை சேர்ந்த இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கி பாரதி என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஒரு வாரம் சிகிச்சையில் இருந்த அவர் மூளைச்சாவடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், மருத்துவமனை ஊழியர்களின் அறிவுரையை ஏற்று அந்த இளைஞரின் உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். அதன் படி அவரது உடலில் இருந்து கிட்னி, லிவர் மற்றும் ஸ்கின் போன்றவற்றை பாரதி மருத்துவமனை தானமாக பெற்றுக் கொண்டதாக கூறப்படுகின்றது. இருதயத்தை அகற்றி அதனை சிறப்பு அனுமதி பெற்று ஆம்புலன்ஸில் சாலை வழியாக கிரீன் காரிடர் முறையில், போக்குவரத்து இடையூறின்றி குறுகிய நேரத்தில் பெரம்பலூருக்கு கொண்டு வந்தனர். இது வரை பிரச்சனை இல்லை அந்த இருதயம் வந்து சேர்ந்த இடம் தான் பிரச்சனையின் ஆரம்ப புள்ளியாக மாறி இருக்கின்றது. அந்த இருதயம் வந்து சேர்ந்த இடம், நெசவாளர்களின் வறுமையை பயன்படுத்தி கிட்னி திருட்டு நடந்ததாக புகாருக்குள்ளாகி கிட்னி மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏ கதிரவனின் மருமகனான நகுலன் என்பவருக்கு சொந்தமான , தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை ஆகும். தமிழகத்தில் இருதயம் தேவை என்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்தில் 78 பேர் முன்பதிவு செய்து மாதக்கணக்கில் காத்திருக்க , சீனியாரிட்டியை தள்ளி வைத்து விட்டு, கடந்த மாதம் 12 ந்தேதி இருதயம் தேவை என்று முன்பதிவு செய்த புதுச்சேரியை சேர்ந்தவருக்கு,பல லட்சம் ரூபாயை கட்டணமாக பெற்றுக் கொண்டு,இந்த இருதயம் பொறுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. இந்த மருத்துவமனையில் இருதய மாற்று அறுவை சிகிச்சைக்காக குறைந்த பட்ச கட்டணமே 20 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடதக்கது. விபத்தில் தங்கள் குடும்பத்தில் ஒருவரை பறிகொடுத்ததோடு, அவரது உடல் உறுப்புகளை பெருந்தன்மையுடன் தானமாக கொடுத்தவர்கள் ஒரு பைசா வாங்க வில்லை..! கொளுத்தும் வெயிலில் சாலையில் நின்று ஆம்புலன்ஸ் வாகனம் விரைவாக செல்ல உதவிய போலீசார் இதற்கு என்று தனியாக கட்டணம் ஏதும் வசூலிக்கவில்லை..! ஆனால் தானம் பெற்ற இருதயத்தை, புதுச்சேரியை சேர்ந்த நபருக்கு விதியை மீறி பொறுத்தி பல லட்சங்களை சம்பந்தப்பட்ட மருத்துவமனை கட்டணமாக பெற்றுக் கொண்டுள்ளதாக வெளியாகி உள்ள தகவல் உடல் உறுப்புகளை தானமாக கொடுப்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இது தொடர்பாக தமிழக உடல் உறுப்பு ஆணைய உறுப்பினர் செயலர் மனோரஞ்சனிடம் கேள்வி எழுப்பினோம், சம்பந்தப்பட்ட மதுரை பாரதி மருத்துவமனையில் தகுதி வாய்ந்த 4 மருத்துவர்கள் சான்றிளித்த பின்னரே அந்த இளைஞர் மூளைசாவடைந்தது உறுதி செய்யப்பட்டது. மாற்று இருதயத்துக்காக 78 பேர் முன்பதிவு செய்து காத்திருந்தாலும் அகிய இந்திய அளவிலான உடல் உறுப்புகள் தான பட்டியல் படி புதுச்சேரியை சேர்ந்தவருக்கு அந்த இதயம் பொறுத்தப்பட்டதாக தெரிவித்தார். அதற்காக சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் பல லட்சங்கள் கட்டணமாக வசூலித்திருப்பது தனக்கு தெரியவில்லை என்று சமாளித்தார். உடல் உறுப்புதானத்தை ஊக்கப்படுத்தும் அதே நேரத்தில் இதனை பயன்படுத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் தனியார் மருத்துவமனைகளின் செயல்பாட்டை கண்காணித்து கடிவாளம் போட வேண்டியது காலத்தின் கட்டாயம்.