ஒருங்கிணைந்த புதுக்கோட்டை மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற மறுசீரமைப்பு குறித்த செயற்குழுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ரகுபதிக்கும், முன்னாள் எம்.எல்.ஏ. உதயம் சண்முகத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கூட்டம் நடைபெற்றபோது, நிர்வாகிகள் இடையே பல்வேறுவிதமான கருத்துகள் விவாதிக்கப்பட்டதால், கூச்சலும் குழப்பமும் நிலவியது. உதயம் சண்முகம் வேகமாக வந்து மேடை ஏறி, 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக ஜெயிக்க வேண்டிய அறந்தாங்கி தொகுதியை காங்கிரஸுக்கு விட்டுக் கொடுத்தது ஏன் எனக் கேட்டார். மேடையில் இருந்த ரகுபதி, உங்கள் மகனால்தான் அறந்தாங்கியில் தவெக ஜெயித்தது என்றும், உங்கள் மகன்தான் தவெக வேட்பாளர் முகமது பர்வேஸை தெருத்தெருவாக அழைத்துச் சென்று ஓட்டுக் கேட்டார் எனக் கூறினார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் நிலவியது. இதைத் தொடர்ந்து, அவர்களைச் சமாதானப்படுத்திய முன்னாள் எம்.பியும், மாநில விவசாய அணிச் செயலாளருமான ஏ.கே.எஸ்.விஜயன், நிர்வாகிகளைக் கடிந்துகொண்டார். புதுக்கோட்டையில்தான் இத்தகைய கருத்து மோதல் சம்பவங்கள் நடைபெறுவதாக அவர் தெரிவித்தார்.