அதிமுகவில் வட்ட செயலாளராக இருந்து, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தவெகவில் சேர்ந்தது முதலே, வாரத்துக்கு ஒரு நிகழ்ச்சியை நடத்தி எதிர்கட்சிகளின் தூக்கத்தை கலைத்ததோடு,ஏரியாவில் செய்த அலப்பறைகளால் பதுங்கி இருந்த பகையாளிகளால் கொலை செய்யப்பட்டார் வண்ணாந்துறை கண்ணன். சென்னை, அடையாறு அடுத்த வண்ணான்துறை பகுதியை சேர்ந்தவர் கண்ணன், அதிமுகவில் வட்ட செயலாளராக இருந்து 2 மாதங்களுக்கு முன்பு தன்னை தவெகவில் இணைத்துக் கொண்டார். omr -ல் உள்ள IT நிறுவனங்களுக்கு கார்களை ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்தார். 2 கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்ததால் சாஸ்திரி நகர் காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி பட்டியலிலும் வண்ணாந்துறை கண்ணனின் பெயர் இடம் பெற்றிருந்தது. கடந்த 5ந்தேதி இரவு வண்ணான்துறை, ராமசாமி அவென்யூ, எல்லையம்ன் கோயில் தெருவில் நின்று கொண்டிருந்த கண்ணனை இருசக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களால் சுற்றி வளைத்து வெட்டி கொலை செய்தனர். சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை வைத்து கொலையாளிகளை அடையாளம் கண்டதாக தெரிவித்த போலீசார் அடையாறு ருக்மணி நகரை சேர்ந்த பரணி என்ற 20 வயது இளைஞரை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் கோவிந்தராஜபுரம், ராகேஷ் (20) திருவான்மியூர், பெரியார் நகர் நரேஷ்(20) கோட்டூர் மணிகண்டன் (20) அடையாறு இந்திரா நகர், ஹரிஹரன் (20) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். காவல்துறையினரிடம் இளைஞர் பரணி அளித்த பரபரப்பு வாக்குமூலம் சினிமாவை மிஞ்சிய ரிவெஞ்சாக இருந்தது. கடந்த 2009ம் ஆண்டு அடையார் பகுதியில் பரணியின் பெரியப்பா சிவா என்பவரை வண்ணாந்துறை கண்ணன் கூட்டாளிகளோடு சேர்ந்து வெட்டி கொலை செய்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதற்கு பரணி குடும்பத்தின் தரப்பில் இருந்து எந்த ஒரு எதிர் தாக்குதலும் நடத்த வில்லை என்று கூறப்படுகின்றது.இந்த கொலை வழக்கை நடத்தியதற்காக பரணியின் தந்தை வேலுவை கடந்த 2016ம் ஆண்டு சைதாப்பேட்டை பகுதியில் வைத்து கொலை செய்யப்பட்டார். இந்த 2 வது கொலை வழக்கில் வண்ணாந்துரை கண்ணனை போலீசார் கைது செய்தனர். தனது பெரியப்பா மற்றும் அப்பாவை கொலை செய்த வண்ணாந்துறை கண்ணன் மீது பரணிக்கு ஆத்திரம் ஏற்பட்டது. 10 வயதாக இருக்கும் போதே கண்ணனை பழிவாங்க வேண்டும் என்று சபதம் எடுத்து பரணி காத்திருந்ததாக கூறப்படுகின்றது. தந்தையின் உயிரிழப்பிற்கு பின்னர் பொருளாதார நிலையில் பரணியின் குடும்பத்தினர் பின் தங்கிய நிலையில், வண்ணாந்துறை கண்ணன் , ஐடி நிறுவன கார் வாடகை ஒப்பந்தம், அதிமுகவில் சேர்ந்து வட்டசெயலாளர் என பொருளாதாரத்தில் உயர்ந்துள்ளார். அப்போது பரணியின் குடும்பத்தினரை சந்தித்து கண்ணன் சமாதானம் பேசியதாகவும், இழப்பீடாக பணம் தருவதாகவும், படிப்பு செலவுகளை ஏற்பதாகவும் கூறியதால், பழிக்கு பழியாக கொலை.. கோர்ட்டு கேஸ்ஸு ஜெயில்லாம் வேண்டாம் என்று பரணி அமைதியாக இருந்ததாக கூறப்படுகின்றது. ஆனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தவெகவில் இணைந்த நாளில் இருந்தே, தங்கள் பகுதியில் வாரத்திற்கு ஒரு கட்சி நிகழ்ச்சியை அமைச்சரையும், எம்.எல்.ஏவையும் அழைத்து நடத்தி அன்னதானம் வழங்குவது, இலவச பொருட்கள் வழங்குவது, கட்சி கொடிகம்பம் நடுவது என்று நிகழ்ச்சிகளை வண்ணாந்துறை கண்ணன் ரீல்ஸ் ஆக வெளியிட்டு அலப்பறை செய்ததால் அவர் மீது ஆத்திரம் அதிகரித்துள்ளது. ஜன நாயகன் பட வெளியீட்டின் போது தங்கள் பகுதியில் உள்ள ஆதரவாளர்களை குடும்பத்துடன் அழைத்துச்சென்று படத்தை காணச்செய்து அதனையும் ரீல்ஸ் ஆக வெளியிட்டுள்ளார் கண்ணன். நாளுக்கு நாள் கண்ணன் தங்கள் பகுதியில் அரசியலில் அதிவேகமாக வளர்ந்து வந்ததால் ஆத்திரம் அடைந்த பரணி படிப்பு முக்கியமல்ல பழிக்கு பழி சம்பவம் தான் முக்கியம் என்ற விபரீத முடிவை கையிலெடுத்ததாக கூறப்படுகின்றது. சம்பவத்தன்று தனியாக நின்ற வண்ணாந்துறை கண்ணனை நோட்டமிட்டு, கூட்டாளிகளுடன் சேர்ந்து சுற்றி வெட்டிக் கொலை செய்ததாக பரணி வாக்கு மூலம் அளித்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். ஒருவர் வெளியிடும் ரீல்ஸ் எந்த அளவுக்கு எதிர்தரப்பினரை ஆத்திரம் கொள்ளச் செய்கிறது என்பதற்கு இந்த கொடூர கொலை சம்பவம் மற்றும் ஒரு உதாரணம்.
Back to Top News
Top
September 9, 2026 at 5:15 AM
வண்ணாந்துறை கண்ணனை கொல்ல 10 வயதில் சபதம்.. ரீல்ஸ் அலப்பறையால் சம்பவம்..! அடையாறு கொலை பின்னணி
Polimer News