திருச்சி, தீரன் நகரை சேர்ந்தவர் சம்பத்குமார். (38) இவர் மிளகுபாறை பகுதியில் பீடா கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு கவிதா (36) என்கிற மனைவியும் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மகளும், ஏழாம் வகுப்பு பயிலும் மகனும் இருந்தனர். கவிதா நாள்தோறும் வீட்டில் சமைத்து,தனது கணவரான சம்பத் குமாருக்கு மதிய சாப்பாடு கொண்டு செல்வது வழக்கம். தீரன் நகரில் இருந்து மிளகு பாறை ஏறக்குறைய இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கவிதா நாள்தோறும் தீரன் நகரிலிருந்து இருசக்கர வாகனம் அல்லது பேருந்தில் வந்து சாப்பாடு கொடுத்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். மதியம் 1.00 மணி முதல் 1.30 மணிக்குள் சாப்பாடு எடுத்துச் செல்வார். இதற்கு அதிகபட்சமாக அரை மணி நேரம் எடுத்துக் கொள்வார் என்று கூறப்படுகின்றது. இந்நிலையில் சம்பவத்தன்று அவர் சாப்பாடு கொண்டுவர தாமதமாகியுள்ளது. இதனால் காத்திருந்து காத்திருந்து பசியால் நொந்து போன சம்பத்குமார் நேரடியாக தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு தீரன் நகரில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார். தாமதம் குறித்து கவிதாவிடம் கேள்வி மேல் கேள்வி எழுப்பி உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த சம்பத்குமார் தேங்காய் உரிக்கும் கம்பியால் கவிதாவின் தலையில் தாக்கியதால் கவிதாவின் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. மனைவியை திருச்சி சீனிவாசா நகரில் உள்ள RJ என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த சம்பத்குமார் , கவிதாவின் தாய் தந்தைக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். கவிதா சிகிச்சையில் இருந்த மருத்துவமனைக்கு மாலையில் சென்ற சம்பத்குமார் , சாப்பாடு எடுத்து வருவதை விட அப்படி என்ன முக்கியமான வேலையில் இருந்தாய் ? என்று கவிதாவிடம் கேட்டு மீண்டும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த சம்பத்குமார் அங்கிருந்த ஸ்குரூ டிரைவரால் கவிதாவின் கை, தோள்பட்டை, வயிறு, நெஞ்சு ஆகிய நான்கு இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த கவிதா அலறியபடியே கீழே சாய்ந்தார். அவரது அலறல் சத்தம் கேட்ட மருத்துவமனை செவிலியர்கள் ஊழியர்கள் , இது குறித்து உறையூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அந்த மருத்துவமனை டாக்டர்கள் முதல் உதவி சிகிச்சையும் மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து கவிதா திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். கவிதாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மனைவி கொலை தொடர்பாக சம்பத்குமார் கைது செய்யப்பட்டார். குடிப்பழக்கம் உள்ள சம்பத்குமார் தனது மனைவியிடம் பெற்றோர் வீட்டில் இருந்து நகை பணம் கேட்டு தொல்லை செய்து வந்ததாகவும், அதனால் தங்கள் பெண்ணை அவன் கொலை செய்து விட்டதாக கவிதாவின் பெற்றோர் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். தாய்மாமன் மகளான கவிதாவை காதலித்து சம்பத்குமார் திருமணம் செய்துள்ளார். பட்டப்படிப்பு முடித்த கவிதா தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்துள்ளார். நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி கவிதாவை வேலைக்கு அனுப்பாமல் நிறுத்தி உள்ளார் சம்பத்குமார். இந்த நிலையில் வேலையில் இருந்து நின்றாலும் மனைவி தான் இல்லாத நேரங்களில் யாருடனோ செல்போனில் பேசிவருவதாக சந்தேகித்து அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று சாப்பாடு எடுத்து வர தாமதமானதற்கும் இது தான் காரணம் என்று சந்தேகித்து சண்டையிட்டு இந்த கொடூர கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக சம்பத்குமார் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
Back to Top News
Top
July 16, 2026 at 4:37 AM
சாப்பாடு கொண்டு வர தாமதம்.. மனைவியை விரட்டி விரட்டி கணவர் குத்தி கொன்றது ஏன்?
Polimer News