கைது செய்யப்பட்டது ஏன்? சபரி வர்மன் நடத்தி வந்த கடையில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை விற்பனை செய்யப்படுவதாக கூறி கடந்த 9ம் தேதியன்று சபரி வர்மனை தென் தாமரைக் குளம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து சுமார் 200 கிராம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. சிறையில் உயிரிழந்த சோகம்..! நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சபரி வர்மன் நீதிமன்ற உத்தரவின் படி நாகர்கோவில் கிளை சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டார். நீதிமன்ற காவலில் இருந்த கைதி சபரி வர்மன், உயிரிழந்து விட்டதாக கடந்த 13 ஆம் தேதியன்று தெரிவிக்கப்பட்டது. இந்த செய்தியை கேட்டு அதிர்ந்து போன குடும்பத்தினர், சபரி வர்மனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், போலீசாரே அடித்து கொலை செய்துவிட்டதாகவும் கூறி உடலை வாங்க மறுத்து, நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் குவிக்கப்பட்டு பெரும் பரபரப்பு நிலவியது. உடல் கூறாய்வு அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்..! மறுநாளும் போராட்டம் நீடித்த நிலையில், இதற்கிடையே சபரி வர்மனின் உடல் கூறு ஆய்வு அறிக்கை வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த அறிக்கையில், சபரி வர்மனின் உடலில் 19 இடங்களில் காயம் இருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. சந்தேக மரணம் என்பதை கொலை வழக்காக மாற்றி நாகர்கோவில் சிறை தலைமை வார்டன் ஜெகன், வார்டன்களான சிவகுமார் மற்றும் திருவிடைநம்பி ஆகிய மூன்று பேரை நேசமணிநகர் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த வழக்கில் சில கைதிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் கூறப்படுவதால், அது தொடர்பான விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் கண்டனம்..! சிறையில் இருந்த கைதியை அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் இந்த சம்பவத்திற்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.