தமிழகத்தின் முதல் மதுபான தொழிற்சாலை உள்பட ஏராளமான மதுபான ஆலைகள், பைவ் ஸ்டார் ஓட்டல்கள், சர்க்கரை ஆலைகள், டிரான்ஸ்போர்ட், ஏற்றுமதி நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள் என 1984 ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரை பல்வேறு தொழில்களில் கொடிகட்டிபறக்கும் EMPEE குழுமத்தின் தலைவர் புருசோத்தமன். இவரது மகன் ஷாஜி புருசோத்தமனோ, தனக்கு தண்டனை கிடைத்தாலும் அதை பற்றி கவலை கொள்ளாமல் நீதிமன்றத்தில் இருந்து சிரித்தபடியே வெளியே வந்தார். கடந்த 2013 ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி நள்ளிரவில் சென்னை பாந்தியன் சாலையோர பிளாட்பாரத்தில் வீடில்லா ஏழை மக்கள் குடும்பத்துடன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்க, மூக்குமுட்ட மது குடித்து விட்டு நிதானமில்லாமல் ஷாஜி புருசோத்தமன் அதிவேகத்தில் ஓட்டி வந்த சொகுசுகார் சாலையில் இருந்து தறிகெட்டு பிளாட்பாரத்தில் ஏறி ஓடியது. இதில் 12 வயதான முனிராஜ் என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானான். இதேபோல் அருகில் படுத்திருந்த வாசு (8), சுபரஞ்சிதா (7), ராஜாமொகைதீன்,(19) மணி (19) ஆகிய நான்குபேரும் காயமடைந்தனர். போலீசாரால் அப்போது உடனடியாக கைது செய்யப்படாமல் நீண்ட தேடுதல் வேட்டைக்கு பின்னர் ஷாஜி புருசோத்தமன் கைது செய்யப்பட்டார். காரை அவர் ஓட்டவில்லை என்று கூறி ஷாஜி புருசோத்தமனை இந்த வழக்கில் இருந்து தப்ப வைக்கவும் முயற்சிகள் நடந்ததாக சர்ச்சை எழுந்தது. சிறுவன் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட வழக்கு விசாரணை கடந்த 13 வருடங்களாக சென்னைகூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் ஷாஜி புருஷோத்தமன் மது போதையில் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியது உறுதியான நிலையில் கடந்த மாதம், அவரை குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்தது. அன்று ஷாஜி புருசோத்தமன் நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில் அவருக்கு எதிராக நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்தார். போலீசார் ஷாஜிபுருஷோத்தமனை தேடிவந்த நிலையில் ,அவர் தனது வழக்கறிஞர் துணையுடன் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இதனை தொடர்ந்து சிறுவனை கார் ஏற்றி கொன்ற வழக்கில் ஷாஜி புருசோத்தமனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையுடன், 10 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தீர்ப்பு வாசிக்கப்பட்ட பின்னர் எஸ்கார்டு போலீசாருடன் சிரித்துக் கொண்டே வெளியே வந்தார் ஷாஜிபுருஷோத்தமன். ஆரம்பம் முதலே இந்த வழக்கில் ஷாஜி புருஷோத்தமன் தரப்பு பல்வேறு யுக்திகளை கையாண்டாலும், தக்க சாட்சியங்களுடன் குற்றத்தை நிரூபித்து தண்டனை பெற்று கொடுத்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
Back to Top News
Top
July 31, 2026 at 6:28 AM
காரை ஏற்றி சிறுவன் கொலை.. மதுபான தொழிற்சாலை அதிபரின் செல்ல மகனுக்கு 5 ஆண்டு ஜெயில்..! ஊரையே குடிக்க வச்சவரு பையனுக்கு தண்டனை..
Polimer News