ஹரினி என்ற 26 வயது இல்லத்தரசி, காலை 7.30 மணியளவில் காவல்துறையைத் தொடர்புகொண்டு, தனது கணவர் அபிநந்தன் (33) மற்றும் 4 வயது மகன் யதுவீர் ஆகியோர் வீட்டில் சுயநினைவின்றி கிடப்பதாக பதட்டதோடு தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், இருவரும் உயிரிழந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக விசாரிக்கப்பட்டபோது, ​​ஹரினி ஆரம்பத்தில் தயங்கினாலும், பின்னர் குடும்பத் தகராறு காரணமாக அவர்கள் இருவரையும் மூச்சுத்திணறடித்துக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன. அபிநந்தனின் தாயார் பாக்கியம்மா அளித்த புகாரின் அடிப்படையில், சிக்கபனவரா ((Chikkabanavara)) போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். பொறியியல் பட்டயப் படிப்பு முடித்த அவர், ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். குழந்தை யதுவீர் மழலையர் பள்ளியில் படிக்கத் தொடங்கியிருந்தார். ஹரினி ஒரு இல்லத்தரசியாக இருந்துள்ளார். இந்தநிலையில், 2025 ஜனவரியில் ஹரினி சில நாட்கள் காணாமல் போனதை அடுத்து, வழக்குப்பதிவு செய்து தேடப்பட்ட நிலையில், பின்னர் அவரே திரும்பி வந்துள்ளார். அப்போது, அபிநந்தனின் குடும்பத்தினர் ஹரினி வேறொரு ஆணுடன்சென்றுவிட்டதாக சந்தேகித்தனர். அதைத் தொடர்ந்து, இரு குடும்பத்தினரும் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில்தான், இப்படியொரு கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளது. அதாவது, ஹரினி தனது கணவர் அபிநந்தனை, தனது காதலன் என்று கூறப்படும் வினய் என்பவரின் உதவியுடன் கொலை செய்ததாகத் தெரியவந்துள்ளது. சம்பவத்தின்போது கண்விழித்து கொலையைப் பார்த்துவிட்டதால், அவர்களது 4 வயது மகன் யதுவீர், தலையணையால் மூச்சுத்திணறடிக்கப்பட்டு கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தம்பதியினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதன் பிறகு அவர்கள் தனித்தனி அறைகளுக்குச் செல்வதற்கு முன்பு ஹரினி, அபிநந்தனை கரண்டியால் தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, ஹரினி வினயை வீட்டிற்கு அழைத்ததாகவும், அதைத் தொடர்ந்து இருவரும் அபிநந்தனைத் தாக்கி கழுத்தை நெரித்துக் கொன்றதாகவும் தெரியவந்துள்ளது. இதையெல்லாம், மறைக்கத்தான் சி.சி.டி.வி கேமராக்கள் ஆஃப் செய்யப்பட்டதாகவும், ஹரினியின் செல்போன் கால் ஹிஸ்ட்ரி மற்றும் மெசேஜ்கள் அழிக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. ஹரினி கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள, ஹரினியின் காதலன் என கூறப்படும் வினய்யை தேடி வருவதாகவும், அவரிடம் விசாரித்தால்தான் இதன் முழு உண்மையும் வெளிவரும் எனவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.