திமுக ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சித் துறையில் ரூ.1,000 கோடி அளவுக்கு டெண்டர் முறைகேடு நடைபெற்றதாக அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையை தவெக அமைச்சர்கள் சட்டப்பேரவையில் சுட்டிக்காட்டினர். இதற்கு பதிலளித்த திமுகவைச் சேர்ந்த கே.என்.நேரு,“சும்மா ஊழல், ஊழல் என்று சொல்லாதீர்கள். ஆட்சி உங்களிடம்தானே உள்ளது? முறைகேடு நடைபெற்றிருப்பதாக ஆதாரம் இருந்தால் ஆய்வு நடத்துங்கள்” என்று சவால் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கே.என்.நேருவுடன் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர். முதலமைச்சர் விஜய்யின் கட்டுப்பாட்டில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக கே.என்.நேரு தெரிவித்துள்ளார். காலை முதலே அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதாகவும், ஒரே ஒரு கோப்பை மட்டும் அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தும் நோக்கிலேயே இதுபோன்ற சோதனைகள் நடத்தப்படுவதாக கே.என்.நேரு குற்றஞ்சாட்டினார். இந்த ஆய்வுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். லஞ்ச ஒழிப்புத்துறையின் இந்த ஆய்வு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் கே.என்.நேரு குற்றஞ்சாட்டியுள்ளார்.