தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் குறைவாக உள்ள பகுதிகள் என மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் அடிப்படையில் திருவண்ணாமலை முதலிடத்திலும் தஞ்சாவூர் இரண்டாவது இடத்திலும் சென்னை 14வது இடத்திலும் உள்ளது. திருவண்ணாமலை மாநகராட்சியில் குடியிருப்புகள், ஹோம் ஸ்டேக்களாகவும், லாட்ஜ்களாகவும் மாறி வருவதால் நிலத்தடி நீர் குறைந்து கொண்டே வரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வெள்ளி, சனி, ஞாயிறு போன்ற நாட்களில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை அதிக அளவில் காணப்படுகிறது. அதேபோல், கடந்த 3 ஆண்டுகளாக ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலத்தவர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்து இங்கேயே இடம் வாங்கி வீடுகளைக் கட்டி குடிப்பெயர்ந்தும் வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், திருவண்ணாமலையில் தற்போது தண்ணீர் தேவை அதிகரித்தததாகவும், 1300 அடிக்கு கீழ் ஆழ்துளை கிணறு அமைக்கப்படுவதால் ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்த ஆழ்துளை கிணறுகளில் ஊற்று வராமல் உள்ளூர்வாசிகள் தண்ணீர் இன்றி அவ்வப்போது தவிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.