நடிகர் விக்ரமின் மகள் அக் ஷிதா, மு.க.முத்துவின் மகள் வழி பேரன் மனுரஞ்சித்தை , கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் கிழக்குகடற்கரை சாலையில் உள்ள அக்கரை பகுதியில் வசித்து வருகின்றார். இவர்களது வீட்டிற்கு தனது பேத்தியை பார்ப்பதற்கு விக்ரம் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் தவறாமல் செல்வது வழக்கம். அந்தவகையில் அங்கு சென்ற போது வீட்டில் இருந்த லார் கிப்பன் குரங்கோடு விளையாடியதாகவும், அதனை இன்ஸ்டாகிராமில் வீடியோவாக பதிவிட்டதாகவும் கூறப்படுகின்றது. இதனை கண்டு நண்பர்கள் சிலர் எச்சரித்ததால் அந்த வீடியோவை விக்ரம் உடனடியாக நீக்கி விட்டார். அதற்குள்ளாக சீயான் விக்ரம் , லார் கிப்பன் குரங்கோடு சில்லென்று விளையாடிய வீடியோவை சிலர் சமூக வலைதளங்களில் பகிர அது வனத்துறையினரின் கண்களில் பட்டு விட்டது. பச்சை கிளி வளர்ப்பதே குற்றம் என்று வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தி பறிமுதல் செய்த வனத்துறை,இந்த அரியவகை குரங்கை மீட்குமா? என்றும் சிலர் இந்த வீடியோவை பகிர்ந்தனர். இதையடுத்து “என் கடமை எம்.ஜி.ஆர்..” என்று களத்தில் இறங்கிய வனத்துறை நடிகர் விக்ரமிடம் விசாரணை மேற்கொண்டது. அவர் தனது வீட்டில் குரங்கு இல்லை என்றும் தனது மகள் வீட்டிற்கு சென்ற போது எடுத்த வீடியோ என்றும் கூறி உள்ளார். இதையடுத்து அவரது மகள் அக் ஷிதாவின் வீட்டிற்கு சென்று ஆய்வு மேற்கொண்ட வனத்துறையினர் அங்கு அந்த அரிய வகை குரங்கு இல்லாததை கண்டு ஏமாற்றம் அடைந்தனர். விசாரணையில்,லார் கிப்பான் எனப்படும் இந்த அரியவகை குரங்கை , parivesh2.0 எனப்படும் மத்திய சுற்றுச்சூழல் இணையதளம் மூலம் உரிய ஆவணங்களுடன் ஒருவர் விற்பனை செய்ய வந்ததாகவும், தங்களுக்கு வாங்க விருப்பம் இல்லாததால் அவரிடமே அந்த குரங்கை கொடுத்து விட்டோம் என்று கூறி உள்ளார் அக் ஷிதா. மேலும் தங்களிடம் தரப்பட்ட விற்பனைக்காக அனுமதி ஆவணங்களின் நகலை வனத்துரையினரிடம் ஒப்படைத்தனர் . ஆவணங்களின் அடிப்படையில், அந்த அரியவகை குரங்கு குட்டி முதலில் மணிப்பூரைச் சேர்ந்த லைகுராம் சிங் என்பவர் இருந்ததாகவும், அவர் மொத்தம் 8 லார் கிப்பன் குரங்கு குட்டிகளை வளர்ப்பதற்கு அனுமதி சான்று வைத்திருந்துள்ளார். அந்த குரங்கு குட்டிகளின் பூர்வீகம் மலேசியா எனவும் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. லைகுராம் சிங் தன்னிடம் இருந்த குரங்கு குட்டிகளில் மூன்றை, ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த எஸ்.கே. கேசவநாதனுக்கு விற்றுள்ளார். அவற்றில் ஒன்றுதான் தற்போது நடிகர் விக்ரம் வீட்டில் வீடியோவில் இருந்தது என்று வனத்துறையினர் கண்டுபிடித்தனர். விற்பனை செய்ய வந்த நபர் யார்? அவரிடம் உரிய ஆவணங்கள் இருந்ததா ? இப்போது லார் கிப்பான் குரங்கு யாரிடம் உள்ளது? என்ற கோணத்தில் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். புலியோடும், யானையுடனும் காட்டுக்குள் சென்று செல்ஃபி எடுத்து வம்பை விலைக்கு வாங்குவோர் மத்தியில், வீட்டில் இருந்த படியே விலைக்கு வாங்காத குரங்கை வீடியோ எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டு வில்லங்கத்தை விலைக்கு வாங்கி உள்ளார் சீயான் என்று நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
Back to Top News
Top
August 12, 2026 at 4:58 AM
லார் கிப்பன் குரங்கால் சிக்கி தினறும் சீயான்.. வில்லங்கம் வந்தது எப்படி? பேத்தியை பார்க்க போனாராம்..!
Polimer News