உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சட்டமன்றக் கூட்டத்தொடரும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சூழலில், கே.என். நேரு மீது மேற்கொள்ளப்பட்டுள்ள சோதனை நடவடிக்கை முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது X சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், புதிய அரசு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக விமர்சித்துள்ளார். ஆட்சியமைப்பதற்காக பிற கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து, பின்னர் சட்டமன்ற வளாகத்திலேயே அவர்களைத் தங்கள் கட்சியில் இணைத்துக் கொண்டதாகவும், குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகவும் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் முதல் தகவல் அறிக்கை (FIR) கூட பதிவு செய்யப்படவில்லை என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார். இந்திய ஜனநாயகத்தின் இருண்ட பக்கமாக இத்தகைய போக்கு தொடர்வதாகவும், வழக்கம்போல் மக்களின் கவனத்தை திசைதிருப்பும் நடவடிக்கையாகவே தற்போதைய சோதனை நடவடிக்கையை அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கே.என். நேருவும், திமுகவும் புதிய அரசின் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு அஞ்சப் போவதில்லை என்றும், அனைத்து நடவடிக்கைகளையும் சட்டத்தின் வழியில் எதிர்கொண்டு வெற்றி பெறுவோம் என்றும் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Back to Top News
Top
September 5, 2026 at 6:24 AM
கே.என். நேரு மீதான சோதனை நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது: மு.க. ஸ்டாலின்
Polimer News