சீமை கருவேல மரங்களை அகற்ற முன்வரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் அனுமதி வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்களில் ஒருவரான வைகோ, சில இடங்களில் வருவாய்த் துறை அதிகாரிகள் சீமை கருவேலம் மரங்களை அகற்ற ஆட்சேபம் தெரிவிப்பதன் மூலம் பொதுமக்கள் பங்களிப்பில் சுணக்கம் ஏற்படுவதாகவும், ஆட்சியரின் தலையீட்டுக்கு பிறகு, அவர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக வாதிட்டார். தமிழ்நாடு அரசு தரப்பில், புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு நிலங்களில் வளர்ந்திருந்த சீமை கருவேலம் மரங்கள் 90 சதவீதம் அகற்றப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், நீதிமன்றம் நியமித்த நீதிபதிகளுடன் அரசு துறை செயலாளர்கள் எந்த கூட்டத்தையும் நடத்தவில்லை; இதனால் நீதிபதிகளுக்கு யாரை சந்திப்பது என்பது கூட தெரியவில்லை என அதிருப்தி தெரிவித்தனர். சீமை கருவேலம் மரங்களை அகற்றுவது தொடர்பான உத்தரவை அமல்படுத்தும் வகையில், வருவாய் துறை செயலாளரை நோடல் அதிகாரியாக நியமித்த நீதிபதிகள், ஜூலை 31ஆம் தேதி நேரில் ஆஜராகி தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என அவருக்கு உத்தரவிட்டனர். அதேபோல, சீமை கருவேல மரங்களை அகற்ற தேவையான நிதியை மாநில அரசு ஒதுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர். மேலும், அரசு நிலங்களில் சீமை கருவேல மரங்களை அகற்ற அனுமதி கோரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் அனுமதி வழங்க வேண்டும் என வருவாய் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், மனுதாரர் வைகோவை பின்பற்றி, சீமை கருவேல மரங்களை அகற்றும் பணிகளில் தன்னார்வலர்கள் நேரில் களமிறங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.