கடந்த இரண்டு மாதங்கள் தனது வாழ்வில் மிகவும் கடினமான காலகட்டமாக இருந்ததாக நடிகர் சாந்தனு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், அந்த கடினமான நேரத்தில் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் துணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். தான் நடித்த மலையாள திரைப்படமான ‘பல்டி’ கடந்த மாதம் 10ஆம் தேதி SonyLIV ஓடிடி தளத்தில் வெளியானதாகவும், படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். படம் வெளியானபோது தனது நன்றியை சரியாக வெளிப்படுத்த முடியவில்லை என்றும், அப்போது தனது வாழ்வின் கடினமான சூழலில் இருந்ததாகவும் சாந்தனு தெரிவித்துள்ளார். அந்த நிலையை ரசிகர்கள் புரிந்துகொள்வார்கள் என நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். ‘பல்டி’ படத்தை பார்த்து ரசித்ததுடன், படம் குறித்து பேசிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள சாந்தனு, ரசிகர்களின் விமர்சனங்களும் கருத்துகளும் தனக்கு கிடைத்ததாகவும், அந்த நேரத்தில் தன்னால் பதிலளிக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தனது திரை வாழ்க்கையில் தான் நடித்த படங்களில் தனக்கு மிகவும் பிடித்த படங்களில் ‘பல்டி’ திரைப்படமும் ஒன்றாக இருக்கும் எனக் கூறியுள்ளார். இதற்காக படத்தின் இயக்குநர் உன்னி சிவலிங்கம், தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இன்னும் ‘பல்டி’ திரைப்படத்தை பார்க்காதவர்கள் படத்தை பார்த்துவிட்டு தங்களது கருத்துகளை தெரிவிக்குமாறும் சாந்தனு தனது பதிவில் கேட்டுக்கொண்டுள்ளார். உன்னி சிவலிங்கம் இயக்கத்தில் ஷேன் நிகாம், சாந்தனு, ப்ரீத்தி அஸ்ரானி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2025ஆம் ஆண்டு வெளியான மலையாள திரைப்படம் ‘பல்டி’ என்பது குறிப்பிடத்தக்கது.