என்ன சொன்னார் தவெக எம்எல்ஏ? சட்டமன்றத்தில் பேசிய ராணிப்பேட்டை தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் தாஹிரா, ராணிப்பேட்டை தொகுதியில், JK டயர்ஸ் உற்பத்தி ஆலை இருப்பதாகவும், அந்த ஆலை சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துவதால் அதை இழுத்து மூட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் கீர்த்தனா அதனைதொடர்ந்து பேசிய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, "ஜே.கே. டயர்ஸ் ஆலையை மூட வேண்டும் என்று சொல்லியிருந்தீர்கள். ஆனால், கண்டிப்பாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும்; எல்லா கம்பெனிகளும் இயங்க வேண்டும். அதேநேரத்தில், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் விதமாக நடவடிக்கை எடுத்து, நிறுவனங்களுக்கான சட்டத் திருத்தங்களை வழங்கி, அந்த நிறுவனம் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். அமைச்சர் வி.கே. ராஜீவ் பதில்..! மேலும், இதற்கு பதில் அளித்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வி.கே. ராஜீவ், சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். என்னங்க சொல்றீங்க..! ஆனால் இதெல்லாம் பேசி முடித்த பின்பு தான், ராணிப்பேட்டை தொகுதியில் JK டயர்ஸ் உற்பத்தி ஆலையே இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதனை அறிந்த நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர். "கடல்லயே இல்லையாம்" தமிழ்நாடு பாஜகவின் அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கத்தில், வடிவேலுவின் "கடல்லயே இல்லையாம்" என்ற காமெடியை ஒப்பிட்டு மீம்ஸ் போட்டு வறுத்தெடுத்தனர். "அதெப்படி திமிங்கலம்" திமுக முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா, பாஜகவின் வினோஜ் பி செல்வம் உட்பட பல அரசியல்வாதிகள் "அதெப்படி திமிங்கலம்" என்பது போல இதுகுறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வந்தனர். "இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே" தற்போது தவெக எம்எல்ஏவும், தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனாவும் பேசிய இந்த வீடியோ வைரலாக பரவி வரும் நிலையில், நெட்டிசன்கள் "அடேங்கப்பா..இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே" என மீம்ஸ் போட்டு வருகின்றனர். விளக்கம் அளித்த அமைச்சர் கீர்த்தனா..! இதற்கு சமூக வலைதளபக்கத்தில் விளக்கம் அளித்த அமைச்சர் கீர்த்தனா, ராணிப்பேட்டையில் ஜேகே டயர் நிறுவனத்திற்கு உற்பத்தி ஆலை எதுவும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும், மாண்புமிகு உறுப்பினர் எழுப்பிய சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினை குறித்து ஆய்வு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனம் எது என்று கண்டறியப்பட்டு, தேவைப்படும் இடங்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். ஜேகே டயர் நிறுவனம் சமீபத்தில் வெற்றி தமிழ்நாடு முதலீட்டு மாநாட்டில், 5,143 கோடி ரூபாய் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, தமிழ்நாட்டின் மீதான தனது நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் மேற்கோள்காட்டியுள்ளார். -தயாநிதி