மதுரை மற்றும் கோவை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு இரண்டாவது முறையாக நிராகரித்துள்ளது. இந்த இரு நகரங்களிலும் மெட்ரோ ரயில்களை இயக்கினாலும் அது எந்த வகையிலும் பயணிகளின் நேரத்தை மிச்சப்படுத்தாது, மேலும் பயணிகளை அதிக அளவில் ஈர்க்காது போன்ற காரணங்களை மத்திய அரசு கடந்த முறை கூறியது. 2011 கணக்கெடுப்பின் படி மதுரை, கோவையில் 20 லட்சம் மக்கள் தொகை இல்லை என்பதால் திட்டத்தை நிராகரிப்பதாகவும் மத்திய அரசு சுட்டிக் காட்டி இருந்தது. மே மாதத்தில் இந்த திட்டத்தை மீண்டும் தமிழக அரசு வலியுறுத்திய நிலையில் இந்த முறையும் நிராகரிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை மட்டுமே ஒரே அளவுகோல் அல்ல என்று விளக்கம் அளித்துள்ள மத்திய அரசு இரு முன்மொழிவுகளும் "முழுமையாக" பரிசீலிக்கப்பட்ட பின்னரே திருப்பி அனுப்பப்பட்டதாகவும் தெளிவுபடுத்தியுள்ளது. மெட்ரோவுக்குப் பதிலாக BRTS எனப்படும் பிரத்யேக பாதைகளில் விரைவுப் போக்குவரத்துக்கான அமைப்புகளை உள்ளடக்கிய பேருந்து சேவையை செயல்படுத்த பரிந்துரைத்துள்ளது.