தோனி CSK-யில் 25% பங்கு கேட்டாரா? – நிர்வாகம் விளக்கம் முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனும், தற்போதைய விக்கெட் கீப்பருமான எம்.எஸ்.தோனி, அணியில் 25 சதவீத பங்குகளை கேட்டதாகவும், பின்னர் அதை 20 சதவீதமாக குறைத்ததாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, CSK நிர்வாகம் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ளது. தோனி, CSK அணியில் 25 சதவீத பங்குகளை கேட்டதாகவும், பின்னர் 20 சதவீத பங்குகளுக்கு சம்மதித்ததாகவும், அதற்கு பதிலாக அணியின் நிர்வாகம் 5.5 சதவீத பங்குகளை வழங்க முன்வந்ததாகவும் தகவல் வெளியானது. ஆனால், இந்த தகவலை CSK நிர்வாகம் மறுத்துள்ளது. இதுகுறித்து CSK-வின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், “தோனி இதுகுறித்து எங்களிடம் ஒருபோதும் கேட்டதில்லை. இது தொடர்பாக நாங்கள் எந்த விவாதமும் நடத்தவில்லை. மேலும், தோனி என். சீனிவாசனிடமும் இதுபற்றி பேசியதாக எங்களிடம் எந்தத் தகவலும் இல்லை” என தெரிவித்துள்ளார். CSK-யில் தோனிக்கு ஏற்கனவே பங்குகள்? வெளியான தகவலின்படி, CSK அணியின் உரிமை நிறுவனத்தில் தோனிக்கு ஏற்கனவே ஒரு லட்சத்திற்கும் அதிகமான பங்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. CSK நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாததால், அதன் பங்குகளை தனிப்பட்ட முறையில், சந்தைக்கு வெளியான பரிவர்த்தனைகள் மூலம் வாங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. CSK நிறுவனத்தின் மொத்த பங்குகளில் 55 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகள் முன்னாள் BCCI தலைவர் என். சீனிவாசனின் குடும்பத்திடம் இருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், பொதுமக்களிடம் 30 கோடிக்கும் அதிகமான பங்குகள் இருப்பதாகவும், இது நிறுவனத்தின் மொத்த பங்கு மூலதனத்தில் சுமார் 40 சதவீதம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தோனியிடம் உள்ள பங்குகளின் மதிப்பு தற்போதைய IPL அணிகளின் சந்தை மதிப்பீட்டின் அடிப்படையில் சுமார் ரூ.2.6 கோடி முதல் ரூ.3 கோடி வரை இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. “25% பங்கு கேட்பது சாத்தியமற்றது” – ஆகாஷ் சோப்ரா தோனி 25 சதவீத பங்குகளை கேட்டதாக வெளியான தகவல் குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ராவும் கருத்து தெரிவித்துள்ளார். தோனி இவ்வளவு பெரிய பங்குகளை கேட்டதாக வெளியான தகவல் நம்பத்தகாதது என்றும், இது திட்டமிட்டு வெளியிடப்பட்ட தகவலாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். “சென்னை சூப்பர் கிங்ஸ் ஐந்து IPL கோப்பைகளை வென்றுள்ளது. இந்தியாவுக்கு வெளியேயும் பல்வேறு அணிகள் மற்றும் வர்த்தக முயற்சிகளுடன் அதன் பிராண்ட் மதிப்பு வலுவாக உள்ளது. CSK ஒரு மிகப்பெரிய பிராண்ட்” என ஆகாஷ் சோப்ரா குறிப்பிட்டுள்ளார். மேலும், CSK-வின் மதிப்பு சுமார் 1.8 பில்லியன் டாலராக இருந்தால், அதில் 25 சதவீத பங்கின் மதிப்பு சுமார் 400 மில்லியன் டாலராக இருக்கும். இவ்வளவு பெரிய தொகைக்கு ஒரு IPL அணியின் 25 சதவீத பங்குகளை யாரும் இலவசமாக வழங்குவது சாத்தியமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஐந்து முறை IPL சாம்பியனான CSK அணியுடன் தோனி தொடர்ந்து பயணித்து வரும் நிலையில், அவரது பங்கு தொடர்பான இந்த தகவல் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.