மலையாளத்தில் வெளியான ‘ரகுவின்டே சொந்தம் ரசியா’ படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் லட்சுமி மேனன். எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு சசிகுமார் நடிப்பில் வெளியான ‘சுந்தரபாண்டியன்’ படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் நாயகியாக எண்ட்ரி ஆனவரை, அவர் ஏற்று நடித்த அர்ச்சனா கதாப்பாத்திரம் தமிழ் சினிமாவின் கடைக்கோடி ரசிகர்கள் வரை அவரை கொண்டு சேர்த்தது. அதே ஆண்டில் வெளியான கும்கி படம் அவரது கேரியரை உச்சத்திற்கு கொண்டு சென்றது. இந்தப் படத்துக்கு சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார். அடுத்து 2013 ஆம் ஆண்டு வெளியான ‘குட்டி புலி’, விஷாலுடன் ‘பாண்டிய நாடு’ படங்களில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து விஷாலுடன் ‘நான் சிகப்பு மனிதன்’, ‘ஜிகர்தண்டா’, ‘கொம்பன்’, ‘வேதாளம்’ படங்களில் நடித்தார். ரவி மோகனுடன் ‘மிருதன்’, விஜய் சேதுபதியுடன் ‘றெக்க’ படங்களில் நடித்திருந்தார். ‘சந்திரமுகி 2’, ‘சபதம்’ படங்களில் நடித்தவர் பெரிய அளவில் சினிமாவில் கவனம் செலுத்தாமல் இருந்தார். அதுவும், தமிழ் சினிமாவில் தடம் பதிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அவர் படங்கள் பெரிய அளவில் ஹிட் அடிக்கவில்லை. கொச்சியில் ஐ.டி ஊழியரை கடத்தி தாக்கியதாக நடிகை லட்சுமி மேனன் மற்றும் மூன்று பேர் மீது கடந்த 2025 ஆம் ஆண்டு எர்ணாகுளம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தற்போது இருதரப்பு சமரசம் காரணமாக கேரள உயர் நீதிமன்றத்தால் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுவிட்டது. மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு லட்சுமி மேனனும் அவருடைய தோழியும் சாலையில் வாகனத்தில் போனவரிடம் நடுரோட்டில் தகராறில் ஈடுபட்டதாக வீடியோ ஒன்று வைரல் ஆனது. 2012 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்த லட்சுமி மேனன், இப்போது பெரிய அளவில் பட வாய்ப்பு இல்லாமல் தவிக்கிறார் என சொல்லப்படுகிறது. கடந்தாண்டு டிசம்பரில் காமராஜ் என்பவரின் இயக்கத்தில் ஒரு படத்தில் லட்சுமி மேனன் நடிப்பதாக இருந்தது. ஆனால் ஷூட்டிங்கிற்கு சரியாக வராததால் அவர் அப்படத்தில் இருந்து நீக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில்தான், இமான் அண்ணாச்சி பக்கத்தில் பச்சை நிற புடவையில் கையில் குழந்தையுடன் லட்சுமி மேனன் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. லட்சுமி மேனனா இது? என ரசிகர்கள் அதிர்ச்சியுடன் ஆச்சர்யத்துடன் கேள்வி எழுப்பி வருவதாகவும் பேசப்படுகிறது. உடல் எடை கூடி, ஆளே அடையாளம் தெரியாமல் மாறியிருக்கிறார் லட்சுமி மேனன் என விவாதிக்கப்பட்டுவருகிறது. சிலருக்கு இது லட்சுமிமேனா? அல்லது ஏஐ போட்டோவா? என்ற சந்தேகம் ஏற்பட்டதாகவும் விவாதிக்கப்படுகிறது. ஆனால் இந்த போட்டோக்கள் செப்டம்பர் 17ஆம் தேதி முதல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கோவையில் நடைபெற்ற ஒரு கடை திறப்பு விழாவில் லட்சுமிமேனன் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் ரசிகர்களின் இதயத்தில் நீங்கா இடம்பிடித்தவர், திடீரென தமிழ் சினிமாவிலிருந்து காணாமல் போயிருந்தார். தற்போது, அடையாளம் தெரியாத அளவுக்கு வந்துள்ளதாக விமர்சிக்கப்பட்டுவருகிறது. ஆனால், ஒரு நடிகை சினிமாவில் தொடர்வதும் ஒதுங்குவதும் அவரது தனிப்பட்ட விருப்பம். உடல் எடை கூடுவதற்கு பல்வேறு மருத்துவக் காரணங்கள் இருக்கலாம். அப்படியிருக்க, நடிகை என்றாலே இப்படித்தான் உடம்பை மெயிண்டெய்ன் செய்யவேண்டும். இப்படித்தான், ஒல்லியாக இருக்கவேண்டும் என கட்டமைப்பது தவறு. எப்போது எடையை கூட்டவேண்டும்? எப்போது எடையை குறைக்கவேண்டும்? என்பதெல்லாம் அந்தந்த நடிகைகளின் தனிப்பட்ட விருப்பம். அப்படியிருக்க, அவர்களது புகைப்படங்களை ட்ரோல் செய்வதால், அது அவர்களை மன ரீதியாக காயப்படுத்தலாம். இதனாலேயே, சில நடிகைகள் வெளியில் வராமல் வீட்டிற்குள் முடங்கிப்போகும் அபாயம் உள்ளது. இத்தனை நாட்கள் கழித்து அவர் ஒரு நிகழ்ச்சியில் வந்து கலந்துகொண்டிருக்கிறாரே என அவரை வரவேற்கவேண்டும். எனவே, இப்படிப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பரப்பி ட்ரோல் செய்வது தவறு என கண்டிக்கும் நடுநிலை நெட்டிசன்கள் “அவர் மீண்டும் வழக்கம்போல் தமிழ்சினிமாவில் நடித்து இன்னும் புகழ் பெறவேண்டும்” எனவும் இதயப்பூர்வமாக வாழ்த்தி வருகின்றனர்.
Back to Top News
Top
September 19, 2026 at 8:21 AM
நடிகை லட்சுமி மேனனா இது…? ஆளே அடையாளம் தெரியலையே.. “அந்த கடத்தல் சர்ச்சைக்கு பிறகு”.. இணையத்தில் கிளம்பிய விவாதம்!
Polimer News