தனது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக நண்பர்களைச் சந்திக்கச் சென்ற 21 வயது இளைஞன், பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. “படிச்சு படிச்சு சொன்னேனே” என அவரது பெற்றோரும் உறவினர்களும் கதறி அழுத காட்சி இதயத்தையே நொறுங்க வைத்தது. செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம், சங்குதீர்த்த குளம் பகுதியைச் சேர்ந்தவர் பல்லவன். இவருடைய மகன் ஜீவா . ஜூலை 12 ஆம் தேதி, தனது 21 வது பிறந்தநாள் என்பதால், அதனைத் தனது நண்பர்களுடன் ‘கேக்’ வெட்டி கோலாகலமாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளார். இதற்காக, திருக்கழுக்குன்றத்தை அடுத்த புலிக்குன்றம் பகுதிக்குத் தனது இருசக்கர வாகனத்தில், ஜீவா சென்றுள்ளார். அப்போது, புலிக்குன்றம் பகுதியில் உள்ள ஒரு வளைவான சாலையில் அவர் திரும்ப முயன்றபோது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த மற்றொரு வாகனமும் இவருடைய வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் தூக்கி வீசப்பட்ட ஜீவாவிற்கு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஜீவா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். பிறந்தநாளன்றே வவிபத்தில் தங்களது மகன் உயிரிழந்த செய்தியைக் கேட்ட அவரது பெற்றோர் மற்றும் நண்பர்கள், உறவினர்கள் உடலைப்பார்த்து கதறி அழுத சம்பவம் அங்கிருந்தோரை சோகத்தில் ஆழ்த்தியது. குறிப்பாக, நடக்கக்கூட முடியாத சூழ்நிலையிலும், தனது பேரனின் உடலைப் பார்த்து அந்த அவரது பாட்டி கண்ணீர் விட்டு கதறிய காட்சி பார்ப்பவர்களின் இதயத்தை கனக்கச் செய்தது. பிறந்தநாள் கொண்டாட்டம், மரண ஓலமாக மாறிய இந்தத் துயரச் சம்பவம் குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய நபரை போலீஸார் தேடிவருகின்றனர். மேலும், பிறந்தநாளில் உயிரிழந்த இளைஞன், ஹெல்மெட் அணியாததே விபத்தில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழப்புக்குக் காரணமாக அமைந்துவிட்டது. ஹெல்மெட் அணிந்து சென்றிருந்தால் உயிரிழப்பை தடுத்து, காப்பாற்றியிருக்கலாம். எனவே, எந்த சூழ்நிலையிலும் ஹெல்மெட் அணிந்து செல்லவேண்டும் என போலீஸார், எச்சரித்துள்ளனர். வீடியோ செய்தியாக காண கீழேயுள்ள வீடியோ லிங்கை க்ளிக் செய்யவும்...
Back to Top News
Top
July 14, 2026 at 1:23 AM
பிறந்தநாளிலேயே துயர மரணம் ; “படிச்சு படிச்சு சொன்னேனே...” நெஞ்சை உலுக்கிய பகீர் சம்பவம்; அந்த ஒற்றை காரணம் தான்!
Polimer News