நாகர்கோவில் சிறையில் அடித்துக்கொல்லப்பட்ட மாற்றுத்திறனாளி சபரி வர்மன் குடும்பத்தினரை சந்தித்து தமிழக அமைச்சர்கள் ஸ்ரீநாத் மற்றும் ராஜேஷ்குமார் ஆகியோர் ஆறுதல் தெரிவித்தனர். அரசு சார்பில் 10 லட்ச ரூபாய் நிவாரணம், வீட்டு மனைப்பட்டா மற்றும் உயிரிழந்தவர் மனைவிக்கு ஒப்பந்த அடிப்படையில் அரசு பணி ஆகியவற்றை வழங்க அவர்கள் முன்வந்தபோது குடும்பத்தினர் ஏற்க மறுத்துவிட்டனர். ஆட்சியர் பிரதாப் மற்றும் எஸ்.பி. ஸ்டாலின் ஆகியோரின் விளக்கத்தை ஏற்க மறுத்த அவர்கள், பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் வீடியோவை ஒப்பிட்டு பார்த்த பிறகே உடலை வாங்க முடியும் என்று தெரிவித்தனர். சபரி வர்மன் உடலை வாங்கி அடக்கம் செய்யுமாறு ஆட்சியர் பிரதாப் பலமுறை கேட்டுக்கொண்டும், ஒரு நாள் அவகாசம் வேண்டும் என்று குடும்பத்தினர் கேட்டதால் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். பின்னர் பேசிய மனித உரிமை ஆர்வலரான வழக்கறிஞர் விஜய் என்பவர், சபரி வர்மன் உடலில் 19 இடங்களில் காயங்கள் இருந்தும் மாரடைப்பால் இறப்பு ஏற்பட்டதாக கூறுவதை ஏற்க முடியாது என்றார்.