ஊருக்குள்ள ஒரு பிரச்சனை என்றால் எம்.எல்.ஏக்கிட்ட புகார் கொடுக்கலாம்... ஆனால் அந்த எம்.எல்.ஏக்கள் தங்கும் விடுதியில் உள்ள உணவகத்தால் பலருக்கும் பிரச்சனை என்றால் யாரிடம் புகார் செய்வது..? இப்படி பரிதவித்தவர்களின் புகார் அறிந்து சட்டமன்ற சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர், அமைச்சர் வெங்கட்ரமணன் ஆகியோர் அங்குள்ள நாச்சியார் மெஸ்ஸிலொ திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அங்குள்ள குளிபதன பெட்டியை முறையாக பராமரிக்காமல் அதில் பழைய உணவு பொருட்களை மூடி வைத்திருந்தது தெரியவந்தது ஒரு ஓட்டலுக்கு உரிய லட்சணமும் இன்றி சுகாதரமற்ற முறையில் துர் நாற்றத்துடன் காணப்பட்டதால் இது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள உணவு பொருள் பாதுகாப்பு அதிகாரிக்கு உத்தரவிட்டனர். அதனை தொடர்ந்து சென்னை மண்டல உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் தமிழ்செல்வன் தலைமையில் சென்ற அதிகாரிகள் குழுவினர், உணவகத்தில் ஆய்வு செய்தனர். சுத்தமா.. அப்படியென்றால் கிலோ எவ்வளவு ? என கேட்கும் அளவுக்கு, கருப்பு படிந்த சமையல் கூடம், பல முறை பயன்படுத்திய கரு.. கரு.. சமையல் எண்ணெய், அழுகிய தக்காளி, உருளை கிழங்கு, செயற்கை வண்ணம் கலக்கும் டப்பாக்கள் என சமையலறை ஒரு மார்க்கமாக காட்சி அளித்தது இந்த இடம் Urine Smell ஆ இருக்கே.. என அதிகாரி ஆதங்கமாய் கேட்க, இல்ல சார் அது Bad Smell தான் என்று கூலாக பதில் சொன்னார் நாச்சியார் மெஸ் உரிமையாளர் சோதனையில், கலப்பட டீ தூள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள், தேதி, தயாரிக்கப்படும் இடமே குறிப்பிடப்படாத Duplicate பன்னீர் என்று உணவு பாதுகாப்பு சட்டத்திற்கு எதிரான அடுக்கடுக்கான உயிருக்கு கேடு விளைவிக்கும் பொருட்களும் சிக்கியது. சமையலுக்கான உணவு பொருட்கள் சேமித்து வைக்கப்பட்ட இடத்தில், பணியாளர்களின் அழுக்கு துணிகள், சபீனா பாக்கெட், ஹிட் பூச்சி விரட்டி பாட்டில் என பழைய பொருட்கள் வைக்கும் ஸ்டோர் ரூம் போல காணப்பட்டது. அனைத்தையும் பறிமுதல் செய்தனர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஒப்பந்த உரிமையாளரிடம், ஏன் இப்படி அளவுக்கு சுகாதாரம் இல்லாமல் வைத்துள்ளீர்கள் என கேள்வி எழுப்பினர். அதற்கு, இந்த இடத்தில் பல்வேறு வசதிகளை செய்து தரவேண்டுமென்று, தலைமை செயலகத்தில் மனு அளித்திருப்பதாக கூறி சமாளித்தார் உணவக உரிமையாளர் இதையடுத்து, உணவு பாதுகாப்பு சட்ட விதிகளின் படி இரு பிரிவுகளில் நோட்டீஸ் வழங்கிய அதிகாரிகள், நாச்சியார் மெஸ் உரிமையாளருக்கு 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததோடு அதனை தற்காலிகமாக மூடுவதற்கும் உத்தரவிட்டுள்ளனர்.