மயங்கி சரிந்த குழந்தை..! கேரளா மாநிலம் மலப்புறம் அருகேயுள்ள கொண்டோட்டி பகுதியை சேர்ந்த முனீர், பஷீனா தம்பதியரின் மூன்று வயது மகன் முகமது ரிஷான். கடந்த திங்கள்கிழமையன்று காலை உணவருந்திய பின் ரிஷானுக்கு, பெற்றோர் நொறுக்கி தீனியாக சாப்பிட “மிக்ஸர்” கொடுத்துள்ளனர். குழந்தை மிக்ஸரை சாப்பிட்ட போது அதில் இருந்த பெரிய அளவிலான வேர்கடலை தொண்டைக்குள் சிக்கியுள்ளது. இதனால் மூச்சு திணறல் ஏற்பட்டு குழந்தை மயங்கி சரிந்ததாக கூறப்படுகிறது. சிகிச்சை பலனிறின்றி உயிரிழப்பு..! இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், ரிஷானை தூக்கிக் கொண்டு குன்னம்புறம் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இந்த தகவல் அறிந்த குழந்தையின் பெற்றோர் கதறி துடித்தனர். உடலை கைப்பற்றிய மலப்புறம் போலீஸார் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவர் சொல்வதென்ன? பெற்றோர்கள் கவனத்திற்கு..! இது குறித்து பேசிய குழந்தைகள் நல மருத்துவர் வித்யா, குழந்தைகளுக்கு வேர்கடலை, பாதாம், முந்திரி போன்றவற்றை 6 மாதங்களை கடந்த பின் கொடுக்கலாம், ஆனால் அதை உடைத்து தான் கொடுக்க வேண்டும். அதே போல குழந்தைகளுக்கு முழுமையாக கொடுக்க வேண்டும் என்றால் அவர்கள் 5 வயதை கடக்க வேண்டும். அப்போது தான் அதை மெல்லும் பற்கள் அவர்களுக்கு வளர்ந்திருக்கும் என தெரிவித்தார். அதையும் மீறி அதுபோன்ற உணவு பொருட்களை குழந்தைகளுக்கு கொடுத்தால், நுரையீரலுக்கு செல்லும் பாதையில் சிக்கிக் கொள்ளும், அதன் காரணமாக உயிரிழப்பு கூட நேரிடலாம் என மருத்துவர் எச்சரித்துள்ளார். வேர்கடலை தொண்டையில் சிக்கியதால் 3 வயது குழந்தை மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.