ரூ.100 கோடிக்கும் மேல் மோசடி..! சென்னை சாலிகிராமத்தில் பதிவு செய்யப்படாத தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் என்ற அமைப்பை நடத்தி, தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளித் தரம் உயர்த்துதல், டிடிசிபி, சிஎம்டிஏ உள்ளிட்ட சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி 100 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த அமைப்பை நடத்தி வந்த திமுக நிர்வாகி அரசகுமாரை கடந்த ஜூன் 27-ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். அவருக்கு உடந்தையாக செயல்பட்டதாகக் கூறப்படும் அவரது உறவினர்களான ஆரோக்கியராஜ் என்ற ராஜா மற்றும் சுரேஷ் ஆகியோரும் கடந்த ஜூலை 23-ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 250க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை..! இதுவரை தமிழ்நாடு முழுவதும் 177 தனியார் பள்ளிகள் அளித்த புகார்களின் அடிப்படையில் 17.36 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி நடைபெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் 250க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் மூலம் பல கோடி ரூபாய் பெறப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களுக்குச் சொந்தமான 61-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் தொடர்புடையவர்களின் குடியிருப்பு அலுவலகங்கள், பள்ளி வளாகங்கள், பள்ளிகல்வித்துறை இயக்குனரகம் அமைந்துள்ள டிபி ஐ வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பல கட்டங்களாக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. சோதனையின் போது குற்றச்செயலுடன் தொடர்புடைய ஆவணங்கள் தனியார் பள்ளிகள் தொடர்பான பதிவுகள் அரசு அலுவலகங்களுக்கு அளிக்கப்பட்ட மனுக்கள் பிரதி நிதித்துவ ஆவணங்கள் நிதி தொடர்பான பதிவுகள் கைப்பேசிகள் கணினிகள் ஹார்ட் டிஸ்க்குகள், டிஜிட்டல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது ஊழல் வழக்கு..! இந்த வழக்கின் முக்கிய நபராகக் கருதப்படும் அன்பில் மகேஷின் நெருங்கிய நண்பரான முத்துக்குமார் திநகரில் அலுவலகம் நடத்திவந்தபோதும், பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் வசூல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. வழக்கின் விசாரணைக்கு தொடர்ந்து முத்துக்குமார் ஆஜராகாமல் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவர் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர். இந்த நிலையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்வதில் அப்போதைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஊழல் மற்றும் நம்பிக்கை மோசடி செய்வது கண்டுபிடிக்கப்பட்டு அவர் மீது ஊழல் தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக சென்னை காவல்துறை தெரிவித்தது. 9 இடங்களில் சோதனை..! அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு சொந்தமான சென்னையில் 2 இடங்கள் மற்றும் திருச்சியில் 2 இடங்கள், அவரது உதவியாளர்களான வாலாடி கார்த்திக், அருண் பிரகாஷ் மற்றும் பிரகாஷ் ஆகியோருக்கு சொந்தமான இடங்கள் என மொத்தம் 9 இடங்களில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் காலை முதல் சோதனை நடத்தினர். அன்பில் மகேஷ் வீட்டின் முன் காத்திருந்த கே.என் நேரு..! அன்பில் மகேஷ் வீட்டின் முன் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தனது ஆதரவாளர்களுடன் காத்திருந்தார். அன்பில் மகேஷை சந்திக்க கே.என்.நேருவுக்கு போலீஸார் அனுமதி அளிக்கவில்லை. இதனால் அவரிடம் செல்போனில் பேசிவிட்டு அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார். நடந்தது என்ன? - அன்பில் மகேஷ் விளக்கம் சுமார் 8 மணி நேரமாக நடைபெற்ற இந்த சோதனைக்கு பின், செய்தியாளர்களை சந்தித்து பேசிய அன்பில் மகேஷ், சந்தேகத்தின் பெயரில் இந்த சோதனை நடைபெற்றதாகவும், தான் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது தான் வைத்திருந்த சில ஆவணங்களை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் எடுத்து சென்றுள்ளதாகவும் தெரிவித்தார். வரும் 18ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு ஆஜராக வேண்டும் எனவும் , அங்கு நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தன்னிடம் தெரிவித்ததாக அன்பில் மகேஷ் கூறினார். மொத்தம் 118 ஆவணங்கள் சிக்கியதாம்..! இந்த சோதனையில் சொத்து ஆவணங்கள், வங்கி விவரங்கள், காசோலைகள் ஆகியவற்றுடன் சேர்த்து வழக்கு சம்மந்தமாக 118 ஆவணங்கள்,18 செல்போன்கள், 2 கணினிகள், 3 லேப்டாப்புகள், 8 பென்ட்ரைவ்கள், ஐபேட், டேப் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Back to Top News
Top
September 17, 2026 at 9:49 AM
ரூ.100 கோடிக்கு மேல் மோசடி..! அன்பில் மகேஷ் மீது வழக்கு..! சிக்கிய ஆவணங்கள்..! கண்டிஷனை ஃபாலோ பண்ணாரா?
Polimer News