கிருஷ்ணகிரி மாவட்டம் வீரியம்பட்டியில், நிலத் தகராறில் விசிக நிர்வாகி எதிர்த்தரப்பைத் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அவ்வூரைச் சேர்ந்த விஸ்வநாதன் - திருப்பதி இடையே நிலம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. நிலத்தை எப்படியாவது மீட்க முடிவு செய்த திருப்பதி அதனை வி.சி.கவின் கிருஷ்ணகிரி மண்டல செயலாளர் ஜிம் மோகன் என்பவருக்குப் பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார். இதனையடுத்து ஆட்களோடு அங்கு சென்ற ஜிம் மோகன், விஸ்வநாதனின் குடும்பத்தினரைக் கட்டைகள் கொண்டு தாக்கியதோடு, வீடுகளையும் அடித்து நொறுக்கியதாகக் கூறப்படுகிறது. ஜிம் மோகன் உள்ளிட்டோர் தலைமறைவாக இருப்பதாகப் போலீசார் தரப்பில் கூறியுள்ளனர். ஆனால் நேற்று உளுந்தூர்பேட்டையில் நடந்த வி.சி.க மாநாட்டில் பங்கேற்க ஜிம் மோகன் தனது ஆதரவாளர்களுடன் ஊத்தங்கரையில் ஊர்வலம் சென்றதாகவும் போலீசார் அருகில் இருந்தும் அவரைக் கண்டுகொள்ளவில்லை என்றும் விஸ்வநாதன் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.