காவிரி ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்திற்கு நீர் திறக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. காவிரி ஆணையம் பிறப்பித்த உத்தரவின் படி கர்நாடகா நீர் திறக்கவில்லை, அந்த நீரின் அளவு போதுமானதும் அல்ல, விகிதாச்சார படி நீர் திறக்க ஆணையிட வேண்டும் என்ற தமிழக அரசின் முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஆகஸ்ட் 16-ந்தேதி நிலவரப்படி 64 டி.எம்.சி நீரை திறந்துவிட்டிருக்க வேண்டும், ஆனால் இதுவரை 14 டி.எம்.சி நீர் தான் கிடைத்துள்ளதாக தமிழக அரசு குற்றம்சாட்டியது. இன்றைய நிலவரப்படி விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீரை திறந்துவிட்டுள்ளதாகவும் இது காவிரி ஆணையம் உத்தரவிட்ட அளவை விட அதிகம் என கர்நாடகா வாதிட்டது. இதற்கு பதிலளித்த தமிழக அரசு, அவர்கள் ஒன்றும் தானாக முன்வந்து தண்ணீரை தரவில்லை, கடவுள் மனது வைத்து கொடுத்த மழையை, தான் திறந்து விட்டிருக்கிறார்கள் வாதிடப்பட்டது. கடவுள் கொடுத்த மழை தண்ணீரை முழுமையாக தேக்கி வைக்க முடியாது அதனால் தானே திறந்து விட்டிருக்கிறீர்கள் என கர்நாடகா அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்.