சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த தனிநபர் காப்பீட்டு நிறுவனமான 'சப்' மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த காற்றாலை உற்பத்தி நிறுவனமாக 'நார்டெக்ஸ்' சென்னையில் மையங்களை முதன்முறையாக அமைப்பதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஆஸ்திரேலியாவின் முன்னணி ஆராய்ச்சி சார்ந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் அதன் வளாகத்தை சென்னை வேளச்சேரியில் அமைப்பதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது. சுமார் 50,000 சதுர அடி பரப்பளவில் அமையவுள்ள இந்த வளாகம், சுமார் 125 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாக்கப்பட உள்ளது. அதேபோல், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா கடந்த ஜூனில் தென் கொரியாவிற்கு மேற்கொண்ட பயணத்தின் தொடர்ச்சியாக அந்நாட்டின் முன்னணி வாகன உதிரிபாக உற்பத்தி நிறுவனமான மோட்டிவ்லிங்க், காஞ்சிபுரம் சிப்காட் தொழிற்பூங்காவில் 300 கோடி ரூபாய் முதலீட்டில் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த முதலீடுகள் தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதோடு, உயர்கல்வி மற்றும் மேம்பட்ட உற்பத்தித் துறைகளுக்கான உலகளாவிய மையமாக தமிழ்நாட்டை நிலைநிறுத்துவதில் முக்கியப் பங்காற்றும் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்தார். மேலும், இந்நிறுவனங்களின் முதலீடுகளை எளிதாக்குவதற்கும், அவற்றின் செயல்பாடுகள் தமிழ்நாட்டில் வெற்றிகரமாக அமையத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து வழங்கும் என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உறுதியளித்தார்.
Back to Top News
Top
July 30, 2026 at 7:44 AM
முதலமைச்சர் விஜயின் முன்னிலையில் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின..!
Polimer News