கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றதுடன், மேலும் இருவரை கொலை செய்ய முயன்ற வழக்கிலும் தொடர்புடைய ரவுடி சிக்கனம்பட்டி ராஜாவை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அடுத்த சிக்கனம்பட்டியை சேர்ந்தவர் ராஜா ((வயது 55)) ஆரம்பத்தில் வட்டி தொழில் செய்து வந்த இவர் பின்னர் நிலங்களை வாங்கி விற்கும் தரகராக இருந்துள்ளார். 2013 ஆம் ஆண்டு நிலத்தை வாங்கி விற்கும் தகராறில் சந்திரன் - பாண்டி ஆகிய இருவரை வெட்டி கொலை செய்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அந்தவழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது ஜாமீனில் வெளியே வந்து ரியல் எஸ்டேட் அதிபராக வலம்வந்தார் ராஜா. இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு நிலம் வாங்கி விற்பதில் ஏற்பட்ட போட்டியில் ராஜபாண்டி என்பவரை கொலை செய்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் சாட்சியங்கள் உறுதியாக இருந்ததால் ரவுடி ராஜாவுக்கு கீழமை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவை தக்கல் செய்திருப்பதாக கூறி சிறையில் இருந்து அண்மையில் ஜாமீனில் வெளியே வந்த ராஜா, தனக்கு எதிராக சாட்சி சொன்ன ராஜபாண்டியின் மனைவி பவித்ரா மற்றும் ரவிக்குமார் அகியோரின் உயிருக்கு குறிவைத்துள்ளார். சிறையில் இருந்து வெளியே வந்த நாள் முதல் அவரது நடவடிக்கையை சாதாரண உடையில் சென்று கண்காணித்த போலீசார் , ரவுடியின் புதிய கொலை திட்டம் குறித்து மாவட்ட எஸ்.பி ஜெயகுமாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கையில் கத்தியுடன் என். கோவில்பட்டியில் உள்ள தென்னந்தோப்பு ஒன்றில் பதுங்கி இருந்த ரவுடி ராஜாவை, போலீசார் சுற்றிவளைத்தனர். போலீசாரிடம் கத்தியை காண்பித்து மிரட்டிய ராஜாவிடம் கத்தியை கீழே போடசொல்லி போலீசார் எச்சரித்தனர். உதவி ஆய்வாளர் அருண்பிரசாத்தை கத்தியால் வெட்டி விட்டு தப்பி ஓட முயன்றதோடு பிடிக்க வந்த போலீசாரையும் கத்தியால் வெட்ட முயன்றதால் தற்காப்புக்காக ராஜாவின் காலில் சுட்ட போலீசார் அவர் தப்பிச்செல்லவிடாமல் அவரை மடக்கிப்பிடித்தனர். துப்பாக்கி தோட்டா பட்ட காயத்தால் கீழே விழுந்து கதறி அழுத ரவுடி ராஜாவை மனித நேயத்தோடு தூக்கிச்சென்று மருத்துவமனையில் அனுமதித்து உரிய சிகிச்சை மேற்கொள்ள ஏற்பாடு செய்தனர். ராஜா வெட்டியதில் , கையில் காயம் அடைந்த உதவி ஆய்வாளரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காலில் குண்டடிப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிகப்பட்ட ரவுடி ராஜா, கத்தி கதறி கூச்சலிட்டபடியே படுத்திருந்தான். சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து மாவட்ட எஸ்.பி ஜெயகுமார் மருத்துவமனைக்கு நேரில் சென்று காயம் அடைந்த உதவி ஆய்வாளரை சந்தித்து நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார். போலீசாரால் சுடப்பட்ட ராஜா மீது 3 கொலை உள்ளிட்ட 22 வழக்குகள் உள்ளதாக கூறப்படுகின்றது. போலீசாரின் இரும்புக்கர நடவடிக்கை, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரவுடிகளுக்கு அச்சத்தையும் கிலியையும் ஏற்படுத்தி உள்ளது.