மேகதாது விவகாரம் - ஒத்திவைப்பு தீர்மானம் என்ன ஆனது? மேகதாது அணை விவகாரம் குறித்து ஒத்திவைப்பு தீர்மானம் என்ன ஆனது என உதயநிதி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சபாநாயகர், மேகதாது விவகாரம் தொடர்பான ஒத்திவைப்பு தீர்மானம் ஆய்வில் உள்ளதாக தெரிவித்தார். விவசாயிகள் பிரச்சனைக்கு சரியான தீர்வு தேவை என வலியுறுத்திய உதயநிதி, “மேகதாது அணையை தடுக்க தவெக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?” என கேள்வி எழுப்பினார். “பயிர்க் கடன் தள்ளுபடி வாக்குறுதி என்ன ஆனது?” மேலும், “பயிர்க் கடன் முழுமையாக தள்ளுபடி எனும் தவெக வாக்குறுதி என்ன ஆனது? பயிர்க் கடனை முழுமையாக எப்போது தள்ளுபடி செய்வீர்கள்?” என உதயநிதி கேள்வி எழுப்பினார். காவிரியில் தண்ணீர் வராததால் குறுவை சாகுபடி மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறுவை சாகுபடி இல்லாமல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு என்ன நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். காவிரி டெல்டாவை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். “மேகதாது அணை கட்ட கர்நாடகா தீவிரம்” தவெக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு அதிதீவிரம் காட்டி வருவதாக உதயநிதி குற்றம்சாட்டினார். மேகதாது அணை கட்ட நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கர்நாடக அரசு நிதி கோரியுள்ளதாகவும், அணை கட்டுவது தொடர்பாக டெல்லியில் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் ஆய்வுக்கூட்டம் நடத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கடந்த வாரம் பெங்களூருவில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றதாகவும் குறிப்பிட்டார். “விவசாயிகள் மீது அக்கறை இருந்தால் அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டியிருக்க வேண்டும். காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டுவதில் என்ன தயக்கம்?” என்றும் உதயநிதி கேள்வி எழுப்பினார். “பிரதமர் மோடியை ஏன் சந்திக்கவில்லை?” காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி எம்.பி.க்களுடன் பிரதமர் மோடியை சென்று சந்திக்காதது ஏன் என்றும் உதயநிதி கேள்வி எழுப்பினார். மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருந்தபோது பிரதமருக்கு கடிதம் எழுதியதை விஜய் விமர்சித்ததாகவும், “மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதிவிட்டு தூங்கப்போய்விடுவார்” என விஜய் கூறியதாகவும் உதயநிதி குறிப்பிட்டார். “தமிழ்நாட்டு பிரச்சனைகளுக்கு புதிய டெக்னிக்கை கையாள்கிறது தவெக அரசு” தமிழ்நாட்டு பிரச்சனைகளுக்கு தவெக அரசு புதிய டெக்னிக்கை கையாள்வதாக உதயநிதி விமர்சித்தார். “விஜய் பெங்களூரு செல்கிறார் என வேளாண்துறை அமைச்சர் பேட்டி கொடுக்கிறார். ஒரு தகவலை பரப்பிவிட்டு எதிர்ப்பு வந்ததும் தவெக அரசு பின்வாங்குகிறது. விஜய் பெங்களூரு செல்வது உறுதியாகவில்லை என மேலும் 2 அமைச்சர்கள் தெரிவிக்கின்றனர்” என அவர் கூறினார். உதயநிதியை தொடர்ந்து பேச அனுமதிக்க வேண்டும் - இபிஎஸ் சட்டப்பேரவையில் உதயநிதி தொடர்ந்து பேச அனுமதிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் குரல் கொடுத்தார். உதயநிதிக்கு ஆதரவாக இபிஎஸ் குரல் கொடுத்தபோது அவரது மைக் ஆஃப் செய்யப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, “உதயநிதிக்கு நேரம் முடிந்துவிட்டது, இனி அனுமதிக்க முடியாது” என சபாநாயகர் தெரிவித்தார். மேலும், பயிர்க் கடன் தள்ளுபடி குறித்து இப்போது பேச அனுமதியில்லை என்றும் கூறினார். “தேவையற்ற விஷயங்களை உதயநிதி பேச வேண்டாம். மேகதாது அணை பிரச்சனை பற்றி மட்டும் தான் உதயநிதி பேச வேண்டும்” என சபாநாயகர் அறிவுறுத்தினார். கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு தொடர்பில்லாமல் பேசக்கூடாது என செங்கோட்டையனும் தெரிவித்தார். இதனால் சட்டப்பேரவையில் மேகதாது அணை, காவிரி நீர் மற்றும் பயிர்க் கடன் தள்ளுபடி விவகாரங்களை முன்வைத்து ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
Back to Top News
Top
August 7, 2026 at 5:58 AM
“மேகதாது அணையை தடுக்க தவெக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?” - உதயநிதி கேள்வி
Polimer News