சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர இபிஎஸ் விடுத்த கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்ததால், அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்த பதில் வந்ததும் பேசலாம் என சபாநாயகர் கூறியதையும் ஏற்காமல், இபிஎஸ் உட்பட அதிமுக எம்.எல்.ஏ-க்கள் இருக்கையில் எழுந்து கோரிக்கை விடுத்ததால் தவெக எம்.எல்.ஏகளும் எழுந்து கோஷமிட்டனர். மக்கள் பிரச்சனை பற்றி பேச அனுமதிக்கமாட்டீர்களா என கேள்வி எழுப்பிய இபிஎஸ் அதிமுக எம்.எல்.ஏ-க்களுடன் வெளிநடப்பு செய்தார். அப்போது தவெக எம்.எல்.ஏ-க்கள் மேஜைகள் தட்டி வெளியே போ வெளியே போ கூச்சலிட்டனர். இதை கவனித்த இபிஎஸ் வெளிநடப்பு செய்யும் போது, தான் கையில் வைத்திருந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை உயர்த்தி காட்டி இதைப்பற்றி என்னவென்று இந்த எம்எல்ஏக்களுக்கு தெரியுமா? கூச்சலிட்டு சிரித்துக்கொண்டு இருக்கிறீர்கள் என கோபமாக பேரவையிலிருந்து வெளியேறினார். அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ-க்களான எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரும் இபிஎஸுடன் சேர்ந்து வெளிநடப்பு செய்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ், ஈரானிய கடற்கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக மீனவரின் உடலை ஒரு வாரமாகியும் தமிழகம் கொண்டு வரவில்லை எனவும், 3 பேர் காயமடைந்துள்ளனர், தமிழக மீனவர் உயிர் சம்மந்தப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானம் என்று கூட தெரியாமல் தவெக எம்.எல்.ஏ-க்கள் கைத்தட்டி சிரிப்பதாக விமர்சனம் செய்தார்.