மாயமான கல்லூரி மாணவி..! விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அருகே 17 வயது சிறுமி ஒருவர் முதலாம் ஆண்டு நர்சிங் படித்து வந்து வந்துள்ளார்.கடந்த 13 ஆம் தேதி கல்லூரிக்கு சென்ற மாணவி மாலையில் வீடு திரும்பாததால், சிறுமியின் குடும்பத்தினர் கல்லூரிக்கு சென்றுள்ளனர். ஏற்கனவே சிறுமி கிளம்பிவிட்டதாக அங்கு கூறியதால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், தனது மகளை காணவில்லை என கிளியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், அதே பகுதியை சேர்ந்த 22 வயது இளைஞர் மீது சந்தேகம் இருப்பதாகவும், அவரை விசாரித்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என புகார் அளித்திருந்தார். 'சிங்கப் பெண் அதிரடிப்படை' அலட்சியம்? சிறுமி காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்த போலீசார், அது சம்பந்தமாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. மறுநாளே, சிறுமியின் குடும்பத்தார் சிங்கப் பெண் அதிரடிப்படைக்கு தகவல் தெரிவித்தனர். இது சம்பந்தமாக சிங்கப் பெண் அதிரடிப்படையும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை உரிய முறையில் விசாரணை செய்யவில்லை என கூறப்படுகிறது. கல்லூரி மாணவிக்கு நடந்தது என்ன? கடந்த 15 ஆம் தேதியன்று, மாயமான சிறுமி கிளியனூர் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். போலீசார் தாயாரை வரவழைத்து விசாரித்தபோது, சிறுமி தனது தோழியின் வீட்டில் தங்கியிருந்ததாகவும், தன்னை காணவில்லை என புகார் அளித்ததை அறிந்து, காவல் நிலையத்திற்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் சிறுமியின் தாயார், யாரோ தனது மகளை மிரட்டி இப்படி சொல்ல வைத்திருக்கிறார்கள், அந்த 22 வயது இளைஞனை காப்பாற்ற போலீசார் இந்த வழக்கை மூடி மறைக்க பார்க்கிறார்கள் எனவும் வாக்குவாதம் செய்ததோடு, காவல் நிலையம் முன்பு இருந்த சாலையில் அழுது உருண்டதால் பரபரப்பு நிலவியது. உயிரை மாய்த்துக் கொள்ள போவதாக மிரட்டல்..! சிறுமியின் உறவினர் பெண் ஒருவர் அவரச உதவி எண்ணிற்கு போன் செய்து, நாங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள போவதாகவும், போலீசாரும், சிங்கப்பெண் சிறப்பு படை காவலர்களும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என போனில் பேசியுள்ளார். பின்னர், அங்கிருந்த போலீசார் சிறுமியின் குடும்பத்தினரை சமாதானம் செய்து, வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். சிறுமியை காப்பகத்திற்கு அனுப்பி வைத்த போலீசார், நாளை தாயாரோடு அனுப்பி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Back to Top News
Top
July 16, 2026 at 4:14 PM
காவல் நிலைய வாசலில் அழுது உருண்ட தாய்..! கல்லூரி மாணவிக்கு நடந்தது என்ன? 'சிங்கப் பெண் அதிரடிப்படை' அலட்சியம்?
Polimer News