ஜிஎஸ்டி பில் தொடர்பாக அச்சுறுத்தி, அபராதம் விதிப்பதாகக் பிளாக்மெயில் செய்து லஞ்சம் கேட்பதாக சென்னை செளகார்ப்பேட்டையில் ஜிஎஸ்டி எஸ்பி உள்ளிட்ட அதிகாரிகளை வியாபாரிகள் சிறைபிடித்ததால் போலீசார் வந்து மீட்டுச் செல்லும் நிலை ஏற்பட்டது. மிண்ட் தெருவில் மகிபால் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் நிறுவனத்தில் வைத்து ஜிஎஸ்டி அதிகாரிகள் 3 பேர் மற்றும் உதவியாளர்கள் என 5 பேர் சிறை பிடிக்கப்பட்டனர். யாரையும் வெளியே செல்ல விடாத வகையில் நிறுவனத்திற்கு வெளியே வியாபாரிகள் திரண்டு நின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பூக்கடை பகுதி துணை ஆணையர் தலைமையிலான போலீசார் ஏராளமானோர் சென்று அதிகாரிகளை பத்திரமாக மீட்டு அழைத்து வந்தனர். இரு தரப்பினரையும் யானைகவுனி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இருதரப்பு புகார்களையும் பெற்றுக் கொண்டு அவர்களை அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் ஜி எஸ் டி கண்காணிப்பாளர் நிஷாந்த் கொடுத்த புகாரின் பேரில் ஸ்டீல் விற்பனை நிறுவன உரிமையாளர் உள்ளிட்டோர் மீது யானை கவுனி போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.