பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் மேகதாது அணை விவகாரம் குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யவில்லை என்றால், அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார். காவிரியில் கர்நாடக அரசு மேகதாது அணை கட்டினால், தமிழகத்துக்கு ஒரு சொட்டுத் தண்ணீர்கூட கிடைக்காது என்றும், 20 மாவட்டங்களில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். காவிரி நீரை மட்டும் நம்பியுள்ள டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறும் அபாயம் ஏற்படும் என்றும், கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த பெங்களூரு செல்லும் முடிவை முதலமைச்சர் பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.