உலகளாவிய முதலீட்டாளர்களை சந்திக்கவும், முக்கிய தொழில் முதலீடுகளை ஈர்க்கவும் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், 10 ஆம் தேதி லண்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் அமைச்சராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொண்ட விஜய், செப்டம்பர் 16 ஆம் தேதிவரை பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களின் தலைவர்களை சந்திக்கவுள்ளார். இந்த சூழலில், செப்டம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் சில்வர்ஸ்டோனில் நடைபெறும் மிச்செலின் லெ மான்ஸ் கோப்பை ((Michelin Le Mans Cup)) கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் போட்டியிடுவதை முதல் அமைச்சர் விஜய் நேரில் பார்க்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த கார் பந்தயத்தில் போட்டியில் பங்கேற்க உள்ள அஜித்குமார், ஏற்கெனவே லண்டனில் தனது குழுவுடன் தீவிர பயிற்சி மேற்கொண்டு வந்தார். முன்னதாக, தமிழ்நாடு சட்டசபையின் 110 விதியின் கீழ், அறிவிப்புகளை வெளியிட்ட முதல் அமைச்சர் விஜய், தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி மற்றும் ஒலிம்பிக் நகரம் உருவாக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்ட அஜித் குமார் "தமிழ்நாட்டின் இளைஞர்களை விளையாட்டுத் துறையின் பக்கம் ஈர்த்து, அவர்களிடம் உள்ள திறமைகளை கண்டறிந்து, அவற்றை முறையாக வளர்த்தெடுப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு முன்னெடுப்புகள் மிகுந்த பாராட்டுக்குரியவை. குறிப்பாக, தமிழ்நாட்டில் பிரத்யேகமான மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது" என்று தெரிவித்திருந்தார். இந்த அறிக்கையை திமுகவில் உள்ள அஜித் ரசிகர்கள் விமர்சித்து இருந்தனர். ஆனால் அஜீத் கடந்த காலங்களில் சென்னையில் கார் ரேஸ் நடத்தியதற்காக , மு.க.ஸ்டாலின் மற்றும் உதய நிதியை பாராட்டி அறிக்கை விட்டிருந்தது குறிப்பிடதக்கது. ஆனால் விஜய்யும் அஜீத்தும் நட்பு பாராட்டுவதை தாங்கிக் கொள்ள இயலாதவர்கள் அஜீத்தின் பாரட்டு அறிக்கையை பழித்தனர். அவர்களுக்கு மேலும் அதிர்ச்சியூட்டும் நிகழ்வு ஒன்று லண்டனில் நடக்க இருக்கின்றது. லண்டனில் நடைபெறும் சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தை தமிழ்நாடு முதல் அமைச்சர் விஜய் பச்சை கொடி அசைத்து தொடங்கி வைக்க உள்ளதாக லே மான்ஸ் கோப்பை ((LE MANS CUP)) நிர்வாகம் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. உலகத்தரம் வாய்ந்த ஒரு 'மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்' அமைக்கப்படும் என அறிவித்ததை தொடர்ந்து, உலகின் முன்னணி மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை நேரில் பார்வையிடும் முதல் அமைச்சர் விஜய், அந்த போட்டியில் பங்கேற்கும் நண்பர் அஜித்தை சந்தித்து அன்பை பொழிவார் என கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் அஜித்- விஜய் ரசிகர்கள் தொடர்ந்து மோதிக்கொண்டாலும் அரசியல் ரீதியிலாக மோதிக்கொள்ளவில்லை என்பது சமீபத்திய இணைய விவாதங்கள் உணர்த்துவதாக இருந்தது. அஜீத்தும் விஜய்யும் இதுவரை, பர்சனலாக தொடர்ந்த நட்பை, பகிரங்கமாக தொடர உள்ளதாக கூறப்படுகின்றது. அது, தனது அரசியல் செல்வாக்குக்கு இன்னும் கூடுதல் பலத்தை சேர்க்கும் என நினைக்கும் விஜய் இந்த கார் ரேஸ் மூலமாக, அதனை ஒர்க் அவுட் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
Back to Top News
Top
September 11, 2026 at 12:45 PM
அஜித்துக்கு பச்சைக்கொடி விஜய்.. “ஈஸ்வரா... வானும் மண்ணும்”.. பிரண்ட்ஸிப் மோடில் ரசிகர்ஸ்!
Polimer News