விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சியில் நிச்சயதார்த்தம் முடிந்த ஒரு வாரத்தில் திருமணத்தை நிறுத்திய பெண்ணையும் அவரது தாயையும் இளைஞர் அரிவாளால் வெட்டியதில் தாய் உயிரிழந்தார். பெண் படுகாயமடைந்தார். 37 வயதான யுவராஜ் என்ற அந்த இளைஞருக்கும் 21 வயதான அவரது அத்தை மகள் வர்ஷாவுக்கும் கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு, மே 25ஆம் தேதி திருமணம் நடைபெறவிருந்தது. நிச்சயம் முடிந்ததால், வர்ஷாவை அழைத்துக் கொண்டு வெளியே செல்வதும் அவர் கேட்ட பொருட்களை வாங்கிக் கொடுப்பதும் அவரது செவிலியர் பயிற்சிக்குக் கட்டணம் செலுத்துவதும் என யுவராஜ் நிறைய செலவு செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் திடீரென 16 ஆண்டுகள் வயது வித்தியாசத்தை சுட்டிக்காட்டி வர்ஷா திருமணத்தை நிறுத்தியதோடு, யுவராஜுடன் பேசுவதையும் தவிர்த்ததாகத் கூறப்படுகிறது. இதனால் கோபத்தில் இருந்த யுவராஜ் காலை அரிவாளுடன் வர்ஷா வீட்டுக்குச் சென்று அவரையும் அவரது தாயையும் வெட்டிவிட்டு, காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.