கொடைக்கானல் தாண்டிக்குடி சித்தூர் மலைச்சாலையில் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் சார்பில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட தார் சாலையானது, தரமில்லாமல் அமைத்ததால் சாலை பெயர்ந்து குவியல், குவியலாக சரளை நிறைந்த சாலையாக காட்சியளிக்கிறது. கையில் தொட்டாலே தார் பெயர்ந்து வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலைத் துறையே அமைத்து வரும் தார் சாலை தரமற்ற முறையில் இருப்பதாகவும், மீண்டும் தார் சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைக் கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் உதவி பொறியாளர் சந்தோஷிடம் கேட்ட போது, வெப்பம் இல்லாமல் ஜல்லிக்கற்கள் கொண்டு வந்து சாலை அமைத்ததால் தார் பெயர்ந்து கற்குவியலாக மாறி உள்ளது என்று தெரிவித்துள்ளார். தரமான முறையில் தார் சாலை மீண்டும் அமைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.