தடியடியையும் மீறி கரப்பான் பூச்சி கட்சியின் பேரணி நாடாளுமன்றத்தை நெருங்கியதால் கண்ணீர் புகைகுண்டு வீசப்பட்டதுடன், துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு துணை ராணுவப் படை ஆயத்தமானதால் பதற்றம் நிலவியது. நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தி வருகிறது. இந்த கோரிக்கையுடன் நாடாளுமன்றத்தை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணியாகச் சென்றனர். வழியில் ஆங்காங்கே அவர்களை போலீசார் கைது செய்தனர். தடுப்புகளை மீறிச் சென்றவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. பலத்த பாதுகாப்பையும் மீறி சிலர் நாடாளுமன்றத்தை நெருங்கியதால் கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது. தொடர்ந்து நாடாளுமன்றத்தின் வடக்கு வாயில்களை மூடிய துணை ராணுவப் படையினர், முன்னேறி வருபவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த ஆயத்தமானதால் உச்சகட்ட பதற்றம் ஏற்பட்டது.