சென்னை ஓ.எம்.ஆர். சாலை குமரன் நகர் அருகே கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் தாம்பரம் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். மாணவர்கள் தங்கியிருக்கும் குடியிருப்புகளில் போதைப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து இந்த சோதனை நடைபெற்றது. தாம்பரம் காவல்துறை சார்பில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் இந்த சோதனைப் பணியில் ஈடுபட்டனர். போலீசார் 11 குழுக்களாக பிரிந்து, ஒரே நேரத்தில் பல்வேறு குடியிருப்புகளில் சோதனை நடத்தினர். சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்த அதிரடி சோதனையில், கஞ்சா பாக்கெட்டுகள் உள்ளிட்ட சில போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் தங்கியிருக்கும் பகுதிகளில் போதைப்பொருட்களின் பயன்பாடு மற்றும் விற்பனையைத் தடுக்கும் வகையில் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் சோதனைகள் மேற்கொள்ளப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குடியிருப்பு பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் குறித்து பொதுமக்கள் தகவல் அளிக்க வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.