விவாகரத்து கோரி சங்கீதா வழக்கு..! கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மற்றும் குடியிருப்பு உரிமை கோரி மனு தாக்கல் செய்திருந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக தானும் தனது கணவரும் ஒரே வீட்டில் பிரிந்து வாழ்ந்து வந்தோம், தனக்கு விஜய் உரிய ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும் சங்கீதா மனுவில் குறிப்பிட்டிருந்தார். காணொளி காட்சி வாயிலாக விசாரணை..! கடந்த ஜூன் 15-ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தம்பதியர் இருவரையும் சமரச மையத்திற்கு அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தார். இந்த வழக்கு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் ஏற்கனவே மூன்று முறை விசாரணைக்கு வந்த நிலையில், பிரபலங்கள் என்பதாலும் பாதுகாப்பு காரணங்களினாலும் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, காணொளி காட்சி (Video Conference) மூலமாக ஆஜராக நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. 20 நிமிடங்கள் விளக்கம் அளித்த சங்கீதா..! இந்த வழக்கு ஆகஸ்ட் 7 ஆம் தேதி, நீதிபதி சுஜாதா முன்பு விசாரணைக்கு வந்தது. காலையில் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் விசாரணை தொடங்கியது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறுவதால் வேறு தேதிக்கு ஒத்திவைக்க விஜய் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் சங்கீதா தரப்பில், இன்றே விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கு பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகலில் நடைபெற்ற விசாரணையின்போது, நீதிபதி சுஜாதா முன்னிலையில், லண்டனில் இருந்தபடி, சங்கீதா காணொளி வாயிலாக ஆஜராகி சுமார் 20 நிமிடங்கள் விளக்கம் அளித்தார். மூடப்பட்ட அறையில், விஜய் மற்றும் சங்கீதா தரப்பு வழக்கறிஞர்களுக்கு மட்டுமே நீதிமன்றத்தில் அனுமதி அளிக்கப்பட்டது. விவாகரத்து வழக்கு வாபஸ்..! விசாரணை முடிவில், கணவர் விஜய் மீது தொடரப்பட்ட விவாகரத்து மற்றும் குடியிருப்பு உரிமை கோரும் வழக்குகளைத் தாமாகவே முன்வந்து வாபஸ் பெற்றுக்கொள்வதாக சங்கீதா தெரிவித்தார்.இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி சுஜாதா, விஜய் - சங்கீதா விவாகரத்து மனுவை முடித்து வைப்பதாக அறிவித்தார். மனம் மாறிய பின்னணி..! தானும், தனது கணவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், தனது மகன், மகள் குறித்து சமூக வலைதளங்களில் ஏராளமான விமர்சனங்கள் எழுந்து வருவதால், பிள்ளைகளின் நலனை கருத்தில் கொண்டு சங்கீதா இந்த முடிவை எடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில், ஜேசன் சஞ்சய், நேர்காணல் ஒன்றில் பங்கேற்று பேசியது சமூக வலைதளங்களில் வைரல் ஆனதும் குறிப்பிடக்கத்தக்கது.