டெல்லியில், இரண்டு நாள் பிரிக்ஸ் உச்சி மாநாடு நாளை தொடங்குகிறது. இதில் இந்தியா, சீனா, ரஷ்யா, ஈரான் உள்ளிட்ட 11 உறுப்பு நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கிறார்கள். மாநாட்டுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயாராக இருப்பதாக பிரதமர் மோடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மீள் திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மையைக் கட்டமைத்தல் என்ற கருப்பொருளுடன் நடக்கும் இந்த மாநாட்டில் பங்கேற்க வெளிநாட்டுத் தலைவர்கள் அடுத்தடுத்து வருவதால், தலைநகர் டெல்லியில் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. ரஷ்ய அதிபர் புதின் நள்ளிரவில் டெல்லி வந்தடைந்தார். இன்று மாலை பிரதமர் மோடியைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து புதின் பேச்சுவார்த்தை நடத்துகிறார். சீன அதிபர் ஜி ஜின்பிங் நாளை பகல் 12 மணியளவில் டெல்லி வரவிருக்கிறார். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வரும் அவருடன், அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் வாங் யி மற்றும் 70 பேர் கொண்ட குழுவினரும் வரவிருக்கிறார்கள். நாளை மாலை பிரதமர் மோடியை ஜின்பிங் சந்தித்து, இருநாடுகள் இடையேயான எல்லைப் பிரச்சினை, எல்லையில் அமைதியைத் தொடருதல் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து பேசவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தில்லி பாரத மண்டபத்தில் நாளை பிற்பகல் 2:35 மணிக்கு பிரிக்ஸ் மாநாடு தொடங்குகிறது. மாலை 4:25 மணிக்கு பாரத் இன்னோவேட்ஸ் என்ற கண்காட்சியைத் தலைவர்கள் பார்வையிட உள்ளார்கள். அதைத் தொடர்ந்து நாளை இரவு ஏழரை மணியளவில் பிரம்மாண்ட விருந்துடன் முதல்நாள் நிகழ்ச்சிகள் முடிவடைகின்றன. அதைத் தொடர்ந்து நாளை மறுநாளான ஞாயிறன்று காலை 10:50 மணிக்கு மீண்டும் தொடங்கி மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.