புதுச்சேரியில் மீண்டும் ஒரு போலி மருந்து தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டிருப்பதோடு, 10 ஆண்டுகளாக அதை நடத்தி வந்த பிரபாகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அண்மையில் ராமேஸ்வரம் மண்டபம் கடற்பகுதியில், இலங்கைக்கு கடத்த முயன்ற போலி மருந்து, மாத்திரைகளை கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணையில் இமாச்சல் பிரதேசத்தில் இயங்கும் பிரபல மருந்து நிறுவன பெயரில், புதுச்சேரியில் வைத்து போலியாக தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, புதுச்சேரி குரும்பாபேட் பகுதியில், 'மெடினோக் ஹெல்த்கேர்' என்ற பெயரில் இயங்கிய போலி மருந்து உற்பத்தி ஆலையில் பல மணி நேரம் சோதனை மேற்கொண்ட போலீசார், 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள போலி வலி நிவாரணி மாத்திரைகள், நரம்பு பிரச்சினைகளுக்கு வழங்கப்படும் மருந்து மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். பிரபல நிறுவனத்தின் பெயரில் 20க்கும் மேற்பட்ட போலி மாத்திரை, மருந்துகளை தயாரித்து, நாடு முழுவதும் விநியோகித்துள்ளது, கைது செய்யப்பட்ட பிரபாகரனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏற்கனவே, புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலைகள் கண்டறியப்பட்டு, ராஜா என்பவர் உட்பட 26 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதுடன், 200 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்து, மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Back to Top News
Top
July 15, 2026 at 12:48 PM
புதுச்சேரியில் மீண்டும் ஒரு போலி மருந்து ஆலை கண்டுபிடிக்கப்பட்டு சீல்..!
Polimer News