சஞ்சு சாம்சனின் அணுகுமுறை மற்றும் அணிக்காக அவர் கொண்டிருந்த அர்ப்பணிப்பை இந்திய டி20 அணியின் முன்னாள் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பாராட்டியுள்ளார். நியூசிலாந்து தொடரில் சஞ்சு சாம்சன் எதிர்பார்த்த அளவுக்கு ரன்கள் குவிக்காத நிலையில், இஷான் கிஷன் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். இதனால் மூவரையும் அணியில் விளையாட வைத்து, திலக் வர்மாவை சூழ்நிலைக்கு ஏற்ப வெவ்வேறு பேட்டிங் வரிசைகளில் பயன்படுத்தலாம் என தான் முடிவு செய்ததாக சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். அந்தத் தொடரில் இஷான் கிஷன் 3-வது இடத்தில் பேட்டிங் செய்தபோது, அந்த இடத்தில் இருந்து ஒருவர் எப்படி விளையாட வேண்டும் என்று நான் எதிர்பார்த்தேனோ, அதேபோன்று விளையாடியதாக சூர்யகுமார் கூறினார். “5/2 அல்லது 6/2 என்ற நிலையில் அணி தடுமாறிக் கொண்டிருந்தபோது களமிறங்கி, எதிரணி பந்துவீச்சாளர்களை அச்சமின்றி எதிர்கொண்டு தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்” என்று சூர்யகுமார் குறிப்பிட்டார். அதே நேரத்தில் சஞ்சு சாம்சனின் பேட்டிங்கில் சிறிய சரிவு ஏற்பட்டதாகவும், இதுகுறித்து பேருந்தில் சென்றபோது அவருடன் பேசியதாகவும் சூர்யகுமார் தெரிவித்துள்ளார். அப்போது சஞ்சுவிடம், “சேட்டா, நிலைமை இப்படியே சென்றால் கொஞ்சம் கடினமாக இருக்கும் போலிருக்கிறது” என்று தான் கூறியதாக சூர்யகுமார் தெரிவித்தார். அதற்கு சஞ்சு சாம்சன் அளித்த பதில் தான் தன்னை மிகவும் நெகிழச் செய்ததாக சூர்யகுமார் கூறியுள்ளார். “இந்த அணியை உலகக் கோப்பையில் வெற்றி பெறச் செய்வதற்கு எது சரியான முடிவோ, அதை எடுங்கள். உங்களுக்கு நான் எப்போது தேவைப்பட்டாலும் நான் இங்கே இருக்கிறேன். நான் விளையாடப் போகிறேன் என்ற எண்ணத்திலேயே தொடர்ந்து பயிற்சி செய்து தயாராக இருப்பேன்” என்று சஞ்சு கூறியதாக சூர்யகுமார் தெரிவித்துள்ளார். சஞ்சுவின் இந்த வார்த்தைகள் தனக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்ததாகவும், அவருடைய உயர்ந்த மனநிலையை வெளிப்படுத்தியதாகவும் சூர்யகுமார் கூறினார். இதே இடத்தில் வேறு ஒருவராக இருந்திருந்தால், “நான் இவ்வளவு காலமாக சிறப்பாக விளையாடி வருகிறேன், இவ்வளவு ரன்கள் எடுத்திருக்கிறேன். அப்படியிருக்கும்போது என்னை ஏன் அணியில் விளையாட வைக்கவில்லை?” என்று கேள்வி எழுப்பி இருப்பார்கள். ஆனால் சஞ்சுவின் அணுகுமுறை அதற்கு முற்றிலும் மாறாக இருந்தது. தனிப்பட்ட சாதனைகளைவிட அணியின் வெற்றிக்கே அவர் அதிக முக்கியத்துவம் கொடுத்தார். “உலகக் கோப்பையை வெல்ல அணிக்கு எது சரியான முடிவோ, அதைத்தான் எடுக்க வேண்டும்” என்பதே சஞ்சு சாம்சனின் எண்ணமாக இருந்தது என்று சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். அணியில் தனது இடம் குறித்து தனிப்பட்ட முறையில் கவலைப்படாமல், அணி வெற்றி பெற வேண்டும் என்பதையே முன்னிலைப்படுத்திய சஞ்சு சாம்சனின் இந்த அணுகுமுறை, அவரது அணித் தோழர்களிடையே மட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டைப் பெற்றுள்ளது.