டெல்லியில் இரண்டு நாள்கள் நடைபெறும் பிரிக்ஸ் நாடுகளின் உச்சிமாநாட்டை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். உலகளாவிய நிர்வாகத்தின் தற்போதைய அமைப்பு ஒரு பிரமிடு போல் உள்ளதாகவும், அதிகாரம் மற்றும் முடிவெடுத்தல் என்பதை உயர்மட்டத்தில் உள்ள சில நாடுகளிடம் மட்டும் இருப்பதாகவும், அந்த நாடுகளின் முடிவுகளால் கீழ்கட்டத்தில் உள்ள நாடுகள் மிகவும் பாதிக்கப்படுவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். உலகளாவிய நெருக்கடிகளைச் சந்திப்பதில் முன்னணியில் உள்ள வளரும் நாடுகள், முடிவெடுக்கும் அதிகாரத்தில் பின் தள்ளப்படுவதாகவும் இந்த நிலையை மாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பிரதிநிதித்துவம், பொறுப்புணர்வு, விதி உருவாக்கம் ஆகிய மூன்று அம்சங்களில் கவனம் செலுத்தி திட்டங்களை வகுக்கவும் அவர் வலியுறுத்தினார். உலகப் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் பங்கு வகிக்கும் நாடுகளுக்கு, உலகளாவிய பொருளாதார நிர்வாகத்தை வடிவமைப்பதிலும் உரிய முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். வளரும் நாடுகளை ஒரு விதியைப் பின்பற்றுபவர் என்ற நிலையில் இருந்து விதியை உருவாக்குபவர் என்ற நிலைக்கு மாற்ற பிரிக்ஸ் நாடுகள் கூட்டமைப்பு பாடுபட வேண்டும் என வலியுறுத்திய பிரதமர் மோடி, இந்த முயற்சியில் முன்னிலை வகிக்க இந்தியா தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.