எம்.எல்.ஏ கைது..! தவெக பிரமுகர் அளித்த புகாரின் பேரில் கொலை மிரட்டல், உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், காவல் ஆய்வாளர் ஜானகி தலைமையில் மார்கண்டேயனை கைது செய்தனர். அவர் போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்றபோது, வாகனத்தை செல்ல விடாமல் மறித்த அவரது ஆதரவாளர்களுக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. "துப்பாக்கி முனையில் மிரட்டுகிறார்கள்" - பதறிய எம்எல்ஏ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் கொண்டு செல்லப்பட்ட மார்க்கண்டேயனிடம், சுமார் 11 மணி நேரமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்கு பின்பு மார்க்கண்டேயனை காவல்துறையினர் தூத்துக்குடி அரசு மருத்து கல்லூரி மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்காக அழைத்து சென்றனர். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பக்கம் வழியாக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை அழைத்து வராமல் கொலை குற்றவாளிகள் மற்றும் கைதிகளை மறைத்துக் கூட்டி வருவது போன்று அரசு மருத்துவமனை வளாகத்தின் பின்பக்க வழியாக காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். அப்போது மார்க்கண்டேயன், தன்னை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து காவல்துறையினர் துப்பாக்கி முனையில் மிரட்டியதாகவும், மார்ச்சுவரிக்குள் தன்னை அடைக்கப்பார்க்கிறார்கள் என்றும் தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏடிஎஸ்பி நாக்கை துருத்தி அராஜகம்..! பின்னர், அவர் உடல் பரிசோதனை செய்வதற்காக மருத்துவமனைக்குள் போலீசாரால் அழைத்து செல்லப்பட்டார். செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்களை செய்தி சேகரிக்க விடாமல் ஏடிஎஸ்பி திபு "பத்திரிகையாளர்களை ரவுடிகள்" என்று திட்டியதாலும், பத்திரிகையாளர்களை தாக்கியதாலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வாக்குவாதத்தின் போது, ஏடிஎஸ்பி திபு , நாக்கை துருத்தி மிரட்டினார். இதனை செய்தியாளர்கள் தட்டிக்கேட்டனர். பத்திரிகையாளர்கள் ஒழுக்கமாக நடந்து கொள்ளுங்கள் எனவும் நீங்கள் ரவுடிகளா ? என்று ஏடி.எஸ்.பி கூறியதை கண்டித்து குரல் எழுப்பிய செய்தியாளர்கள், இதற்கு முன்பு இருந்த அதிகாரிகள் எல்லாரும் அன்பாக தான் நடந்து கொண்டார்கள் என பதிலடி கொடுத்தனர். செய்தியாளர்களோடு மல்லுக்கு நின்ற ஏடி.எஸ்.பியை அங்கிருந்த போலீசார் காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை - எம்எல்ஏ மகன்..! கைதான விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மார்கண்டேயனின் மகன் அக் ஷய் மார்கண்டேயன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது , தன்னுடைய அப்பாவை 13 மணி நேரமாக காவல்துறையினர் விசாரித்துள்ளார்கள், அவருக்கு சக்கரை வியாதியும், இதய பிரச்சனையும் இருக்கிறது என்று கூறினார். "அந்த திறன் அவர்களுக்கு இல்லை" - எம்எல்ஏ மார்கண்டேயனை போலீசார் நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றபோது, உங்களை ராஜினாமா செய்யவோ கட்சியில் இணையவோ வலியுறுத்தினார்களா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, அந்த திறன் எல்லாம் அவர்களுக்கு இல்லை என பதில் அளித்தார். முதலில் மிரட்டியதாக கூப்பாடு போட்டவர், அடுத்த சில மணித்துணிகளில் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்பது போல கூறிச்சென்றார் பின்னர், கைதான எம்எல்ஏ மார்கண்டேயன் தூத்துக்குடி மாவட்ட ஜேஎம் 1 நீதிமன்றத்தில், நீதிபதி சுமதி முன்பு ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டார். வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை, மார்கண்டேயனை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Back to Top News
Top
July 21, 2026 at 10:27 AM
"துப்பாக்கி முனையில மிரட்டுறாங்க" - பதறி கதறிய திமுக எம்.எல்.ஏ ..! நாக்கை துருத்திய ஏடிஎஸ்பி அராஜகம்...!
Polimer News